சந்திரபாபு நாயுடுவின் ஹெரிட்டேஜ் பாலில் சோப்பு பவுடர் கலப்படம்- தெலுங்கானாவில் தடை?
ஹைதராபாத்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் பாலில் சோப்பு பவுடர் கலக்கப்படுவதாக தெலுங்கானா அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதனால் தெலுங்கானாவில் ஹெரிட்டேஜ் பாலுக்கு தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
தெலுங்கானா சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ. ரவீந்திர ரெட்டி பேசுகையில், பால் நிறுவனத்தினர் அதிகம் பால் சுரக்கவும், விரைவாக பால் கிடைக்கவும் கறவை மாடுகளுக்கு விசேஷ ஊசி போடுகிறார்கள். இதனால் பாலில் விஷ தன்மை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும், சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் பாலில் கலப்படம் செய்யப்படுகிறது. இந்த பாலை கேரள அரசு தடை செய்து உள்ளது. அதுபோல் இங்கு அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு தெலுங்கு தேச உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதற்கு அமைச்சரும் சந்திரசேகரராவ் மகனுமான கே.டி.ராமராவ் பதில் அளிக்கையில், ஹெரிட்டேஜ் என்பது ஒரு நிறுவனம். அதன் மீது குற்றம் சாட்டினால் அதற்கு அந்த நிறுவனம்தான் பதில் சொல்ல வேண்டும். அதற்கு மாறாக தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் ஏன் ஆவேசப்பட வேண்டும். சந்திரபாபு நாயுடு நிறுவனத்துக்கு இவர்கள் பாதுகாவலர்கள் போல் பேசுவது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றார்.
மேலும் துணை முதல்வர் டி.ராஜய்யா, ஹெரிட்டேஜ் உள்பட 11 நிறுவனங்களின் பால் பாக்கெட் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பஞ்சாகுட்டா பகுதியில் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட ஹெரிட்டேஜ் பாலில் சோப்பு பவுடர் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த பாலை தடை செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
இதற்கு தெலுங்கு தேச உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் சபையை ஒத்தி வைத்தார்.