கர்நாடகத்தின் ஆசைக்கிணங்க... காவிரி பாசன பகுதிகளை ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைப்பு!
டெல்லி: காவிரி பாசன பகுதிகளிலுள்ள நீர் இருப்பை ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை உமா பாரதியை அமைச்சராக கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
காவிரி பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, காவிரி பாசன பகுதிகளில் உள்ள நீர் அளவை ஆய்வு செய்ய வேண்டும் என கர்நாடகா கோரிக்கை வைத்தது. இதையேற்ற நீதிபதிகள், அமித் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டது. 17ம் தேதி இதுகுறித்த தகவலை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆய்வு குழுவை இன்று அமைத்துள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் கமிஷனர், ஜி.எஸ்.ஷா, இந்த குழுவின் தலைவராக செயல்படுவார். மத்திய நீர்வள ஆணையத்தை சேர்ந்த மசூத் ஹுசைன் ஆய்வு குழுவில் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல, கிருஷ்ணா -கோதாவரி பாசன அமைப்பின் தலைமை பொறியாளர் ஆர்.கே.குப்தாவும் இக்குழுவில் இடம் பிடித்துள்ளார்.
தமிழகம், கர்நாடகா தலைமைச் செயலர்கள் அல்லது அவர்கள் நியமிக்கும் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம் பிடிப்பார்கள். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களும், தங்கள் சார்பில் ஒரு தலைமை இன்ஜினியரை குழுவில் இடம்பெற அனுப்ப வேண்டும்.
இக்குழுவில் இடம் பிடிப்போர், நாளை பெங்களூர் வந்து சேர வேண்டும். முதல் ஆயத்த கூட்டம், நாளை மறுநாள் காலை பெங்களூரில் நடைபெறும். இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா தனது அணைக்கட்டுகளிலுள்ள நீரை ஏற்கனவே விவசாயத்திற்கு திறந்துவிட்டுள்ள நிலையில், அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்றுதான் இந்த குழு அறிக்கையளிக்கும் என எதிர்பார்க்கிறது. அணைகளுக்கு வந்த மொத்த நீர் வரத்து எவ்வளவு, அதில் எவ்வளவு தமிழகத்திற்கு திறக்கப்பட்டது, கர்நாடகாவுக்கு திறக்கப்பட்ட நீர் அளவு என்ன என்பது குறித்து முழு தகவலை விசாரித்தால்தான் கர்நாடகாவின் நாடகம் அம்பலமாகும். அல்லது தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது.












Click it and Unblock the Notifications