அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் இந்துக்கள் திருப்பியடிப்பார்கள்: லோக்சபாவில் பாஜக எம்.பி பேச்சு
டெல்லி: வகுப்புவாத சம்பவங்கள் குறித்த விவாத்தின் மீது பேசிய பாஜக எம்.பி, சுவாமி, ஆதித்யானந்த் காங்கிரஸ் போலியான மதசார்பின்மையை பின்பற்றுகிறது என்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்துக்கள் திருப்பியடிக்க தயங்கமாட்டார்கள் என்றும் பேசினார்.
லோக்சபா இன்று கூடியதும் உத்தரபிரதேசத்தில் நடந்த மத கலவரங்கள் குறித்து பேச அனுமதிக்குமாறு காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சபாநாயரை வற்புறுத்தினார். இதையடுத்து மதியத்துக்கு மேலே விவாதத்துக்கு அனுமதித்தார் சபாநாயகர்.
விவாதத்தில் பாஜக எம்.பி ஆதித்யானந்த் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியினர் இமாம்களுக்கு மட்டுமே ஆதரவாக பேசக்கூடியவர்கள். இதில் மத சார்பின்மை எங்கிருக்கிறது? உத்தர பிரதேசத்தில் தீவிரவாதிகள் மீதான வழக்குகளை கூட, சிறுபான்மையினர் என்ற காரணத்துக்காக, மாநில அரசு வாபஸ் வாங்கிவிட்டது. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம், யார் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்கள், யார் மதசார்பற்றவர்கள் என்பதை.
யார் ஒருவர் தனது கடவுள் மட்டுமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிப்பவர் என்று கூறுகிறாரோ அவர்தான் மதவாதி. இந்த காலகட்டத்தில் இந்து மதத்தை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
காஷ்மீரில் இருந்து 3 லட்சம் இந்துக்கள் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டார்களே அது குறித்து இந்த நாடாளுமன்றத்தில் என்றாவது விவாதித்தது உண்டா. காங்கிரஸ் என்றைக்காவது இதை கண்டித்துள்ளதா. 1984ம் ஆண்டு சீக்கியர்கள் குவியலாக படுகொலை செய்யப்பட்டதற்காக காங்கிரஸ் என்றைக்காவது வருத்தப்பட்டது உண்டா.
வங்கதேசத்தில் இருந்து வந்து இந்திய அசாம் மக்களை விரட்டிவிடுபவர்களுக்கு காங்கிரஸ் வக்கீலாக ஆஜராகி வக்காலத்து வாங்கிக்கொண்டுள்ளது. வடகிழக்கு மாநில மக்கள் மீது மாற்றுமதத்தார் நடத்திய கொலைகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் இதுவரை விவாதிக்கப்படவில்லை.
இந்துமதம் என்றுமே மதவெறியுடன் சார்புடன் இருந்தது கிடையாது. அனைவரும் சமம் என்ற கொள்கை கொண்ட மதத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு ஒரு முஸ்லிம் சென்றால்கூட அவரை இந்தியர் என்று கருதுவதில்லை, இந்து என்றுதான் கருதுகிறார்கள். இந்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் அவர்கள் திருப்பியடிக்கத்தான் செய்வார்கள். இவ்வாறு ஆதித்யானந்த் பேசினார். இவரது பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பிற கட்சி எம்.பிக்களுக்கு பேச அனுமதிக்கப்பட்டது.