இந்து பிரபாகரன் உருவானால் ரூ1 கோடி-மன்மோகன்சிங்கை கொலை செய்திருப்பேன்.. சாமியார்கள் பேச்சால் சர்ச்சை
ஹரித்வார்: இந்து மதத்தைக் காக்க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் போல ஒரு இளைஞர் உருவானால் அவருக்கு ரூ1 கோடி பரிசு தருவேன் என அறிவித்திருக்கிறார் இந்துத்துவ சாமியார் யதி நர்சிங் ஆனந்த். மேலும் பீகாரை சேர்ந்த சாமியார் தர்மதாஸ் மகாராஜ், நாடாளுமன்றத்திலேயே நாதுராம் கோட்சே போல முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பேன் என பேசியிருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17-ந் தேதி முதல் டிசம்பர் 19-ந் தேதி வரை தர்ம சன்சத் என்ற் பெயரில் இந்து சாமியார்களின் மாநாடு நடைபெற்றது. தீவிர இந்துத்துவா கொள்கையை வலியுறுத்தும் அகாடாக்களின் தலைவர்கள் உள்ளிட்ட சாமியார்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவருமே சர்ச்சைக்குரிய வகையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருக்கின்றனர். இக்கூட்டத்தில் சாமியார் யதி நர்சிங் ஆனந்த் பேசியதாவது: இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்கள் யுத்தம் நடத்த வேண்டும். 2029-ல் இந்தியாவின் பிரதமராக ஒரு முஸ்லிம் வருவதைத் தடுக்க இந்துக்கள் ஆயுதமேந்த வேண்டும். தர்ம சன்சத் கூட்டம் நடத்துவதின் நோக்கமே 2029-ல் இந்திய பிரதமராக ஒரு முஸ்லிம் வருவதைத் தடுக்கத்தான்.

முஸ்லிம்கள் எதிர்ப்பு பேச்சு
நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் நாட்டின் சாலைகளில் முஸ்லிம்கள்தான் நடமாடுவார்கள். இதனைத்தான் கடந்த 23 ஆண்டுகளாக நான் பேசியும் வருகிறேன். அடுத்த 20 ஆண்டுகளில் 50% இந்துக்கள் முஸ்லிம்களாக மதம் மாற்றப்படுவார்கள். 40% இந்துக்கள் கொல்லப்படுவார்கள். 10% இந்துக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களும் அமெரிக்கா, கனடா, லண்டன், ஐரோப்பா அல்லது இந்தியாவின் ஐ.நா. அகதிகள் முகாம்களில் இருப்பார்கள். கோவில்கள், மடங்கள் எதுவும் இருக்காது. நமது தாய்மார்களும் சகோதரிகளும் பலாத்காரம் செய்யப்பட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சூழ்நிலை வரும். இஸ்லாமிய ஜிகாத் என்பது மிகவும் சக்திவாய்ந்தது.

இந்து பிரபாகரனும் ரூ1 கோடியும்
நாம் நமது ஆயுதங்களை மறந்துவிட்டோம். இந்துக்களை ஆயுதங்கள்தான் காப்பாற்றும். ஆயுதங்களாலேயே நாம் வெல்வோம். இந்து மதத்தை பாதுகாக்க விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போல ஒரு இந்து பிரபாகரன், இளைஞர்களிடத்தில் உருவாக வேண்டும். அப்படி உருவாகும் இந்து பிரபாகரனுக்கு ரூ1 கோடி பரிசுத் தொகை தர தயாராக இருக்கிறேன். இந்து பிரபாகரனை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் ரூ1 கோடி பரிசு தருகிறேன். இந்து பிரபாகரனாக ஓராண்டு நீடித்தால் என்னால் குறைந்தபட்சம் ரூ100 கோடி பணத்தை திரட்டித் தர முடியும். இவ்வாறு யதி நர்சிங் ஆனந்த் பேசினார்.

சிப்பாய் புரட்சி போல நடக்கும்
இந்த கூட்டத்தில் ரூர்கியை சேர்ந்த சாகர் சிந்துராஜ் மகாராஜ் பேசுகையில், நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ஆயுதங்களுடன் செல்லுங்கள்.. எப்போதும் ஆயுதங்களுடன் நடமாடுங்கள்.. உங்களை யாரேனும் தாக்க வந்தால் உயிருடன் போக விடாதீர்கள் என்றார். ஆனந்த் ஸ்வரூப் மகாராஜ் பேசுகையில், ஹரித்துவார் ஹோட்டல்களில் கிறிஸ்தமஸ், ஈத் பண்டிகைகளை கொண்டாட அனுமதிக்க கூடாது. இந்த பண்டிகைகளைக் கொண்டாட அனுமதிக்கும் ஹோட்டல்களின் ஜன்னல்களையும் சொத்துகளையும் அதன் உரிமையாளர்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய கோரிக்கைகளை அவர்கள் ஏற்காவிட்டால் 1857 சிப்பாய் புரட்சி போல ஒரு யுத்தம் நடத்த வேண்டும் என்றார்.

மன்மோகன்சிங்குக்கு கொலை மிரட்டல்
ஜூனா அகாடாவின் மகாமண்டலேஸ்வர் சுவாமி பிரபோத் ஆனந்த் கிரி பேசுகையில், நமக்கு வேறு வழியே கிடையாது. மியான்மரைப் போல இனச்சுத்திகரிப்பு செய்ய வேண்டும். ஒவ்வொரு இந்துக்களும் ஆயுதமேந்த வேண்டும் என்றார். நிரஞ்சனி அகாடா மகாமண்டலேஸ்வர் அன்னபூர்னா மா பேசுகையில், 2029-ம் ஆண்டு இந்த நாட்டின் பிரதமராக ஒரு முஸ்லிம் வந்துவிடக் கூடாது. அவர்களது மக்கள் தொகையை நாம் அழிக்க வேண்டும். நாம் கொலை செய்வதற்கும் சிறைக்குப் போகவும் தயாராக இருக்க வேண்டும். நம்மிடம் 100 வீரர்கள் இருந்தால் 20 லட்சம் பேரை நம்மால் தோற்கடிக்க முடியும். இப்படியான உணர்வுதான் சனாதன தர்மத்தைப் பாதுகாக்கும் என்றார். பீகாரின் தர்மதாஸ் மகாராஜ் பேசுகையில், இந்தியாவும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானும் முஸ்லிம் நாடாக மாறி வருகிறது. நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். நான் மட்டும் எம்.பி.யாக இருந்திருந்தால் நாதுராம் கோட்சே போல மன்மோகன்சிங் மீது என் துப்பாக்கியில் இருக்கும் 6 தோட்டாக்களும் பாய்ந்திருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications