பாதுகாப்பு அவசியம்... திருமணத்திற்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்
பனாஜி: திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்னர் தம்பதிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதனையை கட்டாயமாக்க கோவா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில், மற்றவர்களுக்கு, இந்த நோய் பரவாமல் தடுக்கும் வகையில், இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மகாராஷ்ட்ரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் பரிசீலிக்கப்பட்டது.
இந்தநிலையில், கோவா சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவாவில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு தம்பதிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்குவதே திட்டம்.
எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்குவதற்கான திட்டத்தை கோவா சட்டத்துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த யோசனைக்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் அளித்து விட்டது. மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்த பிறகு, வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என கூறினார்
2006 ஆம் ஆண்டில், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு இதேபோன்ற சட்டத்தை முன்மொழிந்தது, இது பல தரப்பினரின் எதிர்ப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், தமிழகத்தை பொறுத்தவரை, 2013 - 14ல், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 0.83 சதவீதமாக இருந்தது. 2017 - 2018ல், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து, 0.23 சதவீதமாக உள்ளது. எச்.ஐ.வி., பாதிப்பு குறைந்தாலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சென்னையில், 2017 - 2018ல், எச்.ஐ.வி., நோயால் புதிதாக, 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எச்.ஐ.வி., நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 2018 - 19ம் நிதியாண்டில், மத்திய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்ககம், தமிழகத்திற்கு, 71 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மேலும், கூட்டு மருந்துகளையும் வழங்கி வருகிறது.