372 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது அணுசக்தியின் தந்தை ஹோமிபாவின் “மெஹரங்கீர்”
மும்பை: அணுசக்தி தந்தை என்று அழைக்கப்படும் ஹோமி பாபாவின் மும்பை வீடு ரூபாய் 372 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஆனால் வீட்டை ஏலத்தில் எடுத்தது யார் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மும்பையின் மலபார் ஹில் பகுதியில் அமைந்துள்ள ஹோமி பாபவின் வீடு மெஹரங்கீர் என்று அழைக்கப்படுகின்றது. 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் ஹோமி பாபா இறந்தவுடன் அவரது நினைவாக அந்த வீடு கலை மற்றும் கலாச்சார புரவலராக விளங்கிய அவரது சகோதரர் ஜம்ஷெத்தினால் பராமரிக்கப்பட்டு வந்தது.
372 கோடி ரூபாய்க்கு ஏலம்:
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜம்ஷெத் மறைந்த பின் அந்த சொத்து அவர் புரவலராக இருந்த கலைகளுக்கான தேசிய மையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அம்மையம் ஹோமிபாபா வீட்டை ஏலத்தில் விற்க தீர்மானித்தது. ஏலத்தில் அந்த வீடு 372 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அந்த வீட்டை ஏலத்தில் எடுத்தது யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் அந்த வீட்டை விற்க தடை விதிக்கவேண்டும் என்று பாபா அணுசக்தி நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் நீதிமன்றம் வீட்டை விற்க தடை விதிக்க மறுத்துவிட்டது.
மூன்றடுக்கு கட்டிட அமைப்பு கொண்ட அந்த வீட்டிலிருந்து கடலின் அழகான காட்சியை காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.