பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ2 லட்சம் நிவாரணம்!
பெங்களூர்: ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தமிழகத்தின் கோவை வழியாக கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஓசூர் அருகே ஆனைக்கல் என்ற இடத்தில் தடம்புரண்டது.
இதனால் 9 பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 70 பேர் லேசான காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்தோருக்கு ரூ50 ஆயிரமும் லேசான காயமடைந்தோருக்கு ரூ20 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.