முலாயம் மனைவி, இளைய மகனுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தன.. சிபிஐ கேள்வி

இதே சிபிஐதான் சமீபத்தில், முலாயம் சிங் யாதவோ அல்லது அவரது மூத்த மகனும், உபி முதல்வருமான அகிலேஷ் யாதவோ, ஊழல் செய்து சொத்துக்களைக் குவித்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியிருந்தது.
ஆனால் தற்போது முலாயமின் மனைவி மற்றும் இளைய மகனை சிபிஐ குறி வைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
இதுதொடர்பாக வருமான வரித்துறைக்கு சிபிஐ ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா, இளைய மகன் பிரதீக் ஆகியோர் வைத்துள்ள சொத்துக்கள், அவர்கள் கணக்கில் காட்டிய வருவாய்க்குள் வருகிறதா என்பதை விளக்குமாறு கேட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ வழங்கியுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள சொத்துக்கள், 1998ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை வாங்கப்பட்டவையாகும். லக்னோ கண்டோன்மென்ட்டில் உள்ள ஒரு பங்களா, லக்னோவின் காம்தா கிராமத்தில் உள்ள இரண்டு பிளாட்டுகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதில் இந்த இரண்டு பிளாட்டுகளையும் 18 லட்சம் ரூபாய்க்கு வாங்கி அதை ரூ. 2.5 கோடிக்கு விற்றுள்ளனர்.
கடந்த மாதம்தான் முலாயம் சிங் யாதவும், அவரது மகன் அகிலேஷும், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ கூறியிருந்தது. ஆனால் தற்போது முலாயமின் மனைவியையும், அவரது இளைய மகனையும் அது குறி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications