மரணத்திற்கு முன் தேசியக்கொடி ஏற்றி வீர உரை ஆற்றிய அதிகாரி: இறுதிச்சடங்கில் மகள் சல்யூட்
கொல்கத்தா: காஷ்மீரில் சுதந்திர தினத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்படுவதற்கு முன் மத்திய ஆயுதப்படை உயர் அதிகாரி தேசியக்கொடி ஏற்றி, வீர உரை ஆற்றி உள்ளார். அவரைப்பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரமோத்குமாரின் இறுதிச்சடங்கு ஜார்கண்டில் நடைபெற்றது. மனைவி, பெற்றோர் சகோரிதரிகள் கண்ணீர் மல்க, இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். அப்போது பிரமோத்தின் மகள் தனது தந்தைக்கு சல்யூட் அடித்து இறுதிச்சடங்கு செய்தது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். இதனை முன்னிட்டு 49வது பட்டாலியன் சிஆர்பிஎப் கமாண்டன்ட் பிரமோத் குமார் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பின்னர் அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய கமாண்டன்ட் பிரமோத் குமார், நம் நாடு 70வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு படையினருக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் கல்வீச்சு போன்ற சம்பவங்களை நாம் திறமையாக சமாளிக்க வேண்டும் என்றார். தனது உரையை முடிப்பதற்கு முன்பாக தனது கை கடிகாரத்தை பார்த்த அவர் இது மிகவும் முக்கியமான நாள் ஆகும் என்று கூறினார்.

தீவிரவாதிகள் தாக்குதல்
நவ்ஹட்டா பகுதியில் தீவிரவாதிகள் கண்ணிவெடி புதைப்பதாக சிஆர்பிஎப் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பிரமோத்குமார் தலைமையிலான வீரர்கள் வாகனத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

சுட்டுக்கொலை
இதையடுத்து தாக்குதலுக்கு வீரர்களும் தயாராகினர். அந்த துப்பாக்கி சண்டையின்போது 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களை எதிர்த்து வீரமுடன் சண்டையிட்டபோது, பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டு பிரமோத் குமாரின் கழுத்தின் மேல் பகுதியில் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், உடனடியாக அங்குள்ள ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

மரணத்திற்கு முன்பு
"இந்த நாள் ஒரு முக்கியமான நாள்" என்று கூறிய பிரமோத்குமாருக்கு அந்த நாள், அவர் வாழ்வின் இறுதி நாள் என்பது அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இதுபற்றி கருத்து கூறிய, பிரமோத் குமாருடன் சேர்ந்து பணியாற்றிய மத்திய ஆயுதப்படை போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் "இந்த நாள் ஒரு முக்கியமான நாள் என்று அவர் ஏன் சொன்னார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து அவருக்கு முன்னுணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் அப்படி கூறி இருக்க வேண்டும் என்று கூறினார்.

துணிச்சலான வீரர்
பாட்னாவை சேர்ந்த பிரமோத்குமார் கடந்த 1998ம் ஆண்டு துணை ராணுவத்தில் இணைந்தார். 2014ம் ஆண்டு அவர் நகரில் பணியமர்த்தப்பட்டார். சமீபத்தில் கமாண்டன்ட் ஆக பதவி உயர்வு பெற்றவர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றபோதும் அவர் ஜார்கண்டில் வசித்து வந்தார். மிகவும் துணிச்சலானவர். பதற்றமின்றி காணப்படுவார்.

இறுதிச்சடங்கு
பிரமோத் குமாரின் உடல் சிறப்பு விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. பிரமோத் குமார், மனைவி நேஹாவுடன் எப்போது தனது பணி பற்றியும், நாட்டின் பாதுகாப்பு குறித்தும் பேசினாலும் தவறாமல் சொல்லக்கூடிய வார்த்தைகள், நாடுதான் எனக்கு தாய். என் தாய்நாட்டை காப்பதற்காக நான் எதையும் செய்வேன். நான் ஒரு நாள் சவுர்யா சக்கர விருது வாங்குவதை நீ பார்க்கத்தான் போகிறாய் என்று கூறுவார் பிரமோத். இதை அவரது மனைவி நேஹா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

மனைவி கண்ணீர்
நாட்டைப்பற்றி அவர் எப்போது பேசினாலும், தான் வித்தியாசமாக ஒன்றை செய்ய விரும்புவதாக கூறுவார். கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைபேசியில் பேசினார். நமது 6 வயது மகள் ஆர்ணா நடனம் கற்கிறாள் என்றேன். அவர், அவள் நடன வீடியோவை பார்க்கிறேன் என்று சொன்னார். இப்போது அவர் எப்படி பார்ப்பார்? அவர் இல்லாமல் நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை என கூறி கண் கலங்கினார் நேஹா.

ராயல் சல்யூட்
பிரமோத்குமாரின் இறுதிச்சடங்கு ஜார்கண்டில் நடைபெற்றது. மனைவி, பெற்றோர் சகோரிதரிகள் கண்ணீர் மல்க, இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். அப்போது பிரமோத்தின் மகள் தனது தந்தைக்கு சல்யூட் அடித்து இறுதிச்சடங்கு செய்தது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.












Click it and Unblock the Notifications