டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க சாகசம் செய்து பரிதாபமாக பலியான கல்லூரி மாணவர்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சாகசம் செய்தபோது ஏற்பட்ட விபரீதத்தால் உயிர் இழந்தார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஷாலிபந்தாவில் இருக்கும் கவுதமி கல்லூரியில் படித்து வந்தவர் ஜலீலுத்தீன்(19). அவர் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான இந்தியா ஹாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தார்.
இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்ப வீடியோ ஒன்றை எடுக்க முடிவு செய்தார். இந்நிலையில் அவர் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் சில குழந்தைகளை அழைத்து அவர்களிடம் தான் செய்யும் சாகசத்தை வீடியோ எடுக்குமாறு கூறியுள்ளார்.
ஜலீல் தனது வாயில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பந்தத்தை நோக்கி துப்பி சாகசம் செய்துள்ளார். பின்னர் மண்ணெண்ணெய்யை தனது உடலில் தெளித்து தீ வைத்துள்ளார். இதை பார்த்து பயந்து போன குழந்தைகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தீக்காயங்களுடன் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜலீல் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.












Click it and Unblock the Notifications