தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நிற்காத காஷ்மீரிகள்.. ஹைதராபாத்தில் மூவர் கைது
ஹைதராபாத் திரையரங்கம் ஒன்றில் தேசிய கீதம் இசைத்த போது காஷ்மீர் இளைஞர்கள் மூவர் எழுந்து நிற்கவில்லை. அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்; திரையரங்களில் தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாத காஷ்மீர் இளைஞர்கள் 3 பேரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பாராமுல்லா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜமீல் குல், பைஸ் லூனி, முடாசிர் ஷப்பீர். இவர்கள் மூவரும் ஹைதராபாத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர். மாணவர்களான அவர்கள் விடுமுறை நாளான நேற்று அங்குள்ள மந்தரா மாலுக்கு சென்றனர். அங்குள்ள திரையரங்கில் இவர்கள் மூவரும் இந்தி திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர்.
அங்கு திரைப்படம் தொடங்கும் முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். இவர்கள் மூவர் மட்டும் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜேந்திரநகர் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காத காஷ்மீரிகள் மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.