மோடி 'ஜால்ரா' சர்ச்சை... நான் பெருமைமிக்க காங்கிரஸ்காரன் என்கிறார் சசிதரூர்!
திருவனந்தபுரம்: தூய்மை இந்தியா திட்டத்திற்காக மோடி என்னை தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட நான் ஒரு பெருமைமிக்க காங்கிரஸ்காரன்தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூர், முந்தைய ஆட்சியில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு நிலுவையிலுள்ளதால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மோடிக்கு புகழாரம் சூட்ட தொடங்கியதாக சசிதரூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கிளீன் இந்தியா திட்டத்திற்காகு ஒத்துழைக்க, கமல்ஹாசன் உட்பட பலருக்கும் மோடி அழைப்புவிடுத்திருந்தார். ஆனால் அவர் அழைப்புவிடுத்த ஒரே அரசியல்வாதி சசிதரூர் மட்டுமே.
இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கூறுகையில், மோடி அழைத்ததற்காக சசிதரூர் வேண்டுமானால் பெருமைப்படலாம், நான் அவர் அழைக்காததால் பெருமைப்படுகிறேன் என்றார். கேரள காங்கிரஸ் பிரமுகர் எம்.எம்.ஹுசைனும், சசிதரூர், சமீபகாலமாக மோடிக்கு ஜால்ரா அடித்து வருவது குறித்து கட்சிக்குள் விவாதிக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில், சசிதரூர் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ளார். பிரதமரின் அழைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதால் அதை ஏற்றுக்கொண்டேன். நான் பெருமைமிக்க காங்கிரஸ்காரன், பெருமைமிக்க இந்தியன். சுருக்கமாக சொன்னால், நான் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படவில்லை. இந்தியாவுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறேன். எனது நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைமை முதிர்ச்சியோடு புரிந்து கொண்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications