வாய்ப்பு கிடைத்தால் நடந்தே பாக். செல்வேன்.. மீண்டும் சூட்டைக் கிளப்பும் நடிகை ரம்யா!
பெங்களூரு: பாகிஸ்தானும், பாகிஸ்தானியர்களும் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் பல ஆயிரம் மைல்களை நான் நடந்தே கடந்து பாகிஸ்தான் செல்ல விரும்புகிறேன் என்று நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான ரம்யா தெரிவித்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா அண்மையில் கன்னட டிவிக்கு அளித்த பேட்டியில், 'பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தரங்கில் கலந்துக்கொண்டேன்.
அங்குள்ள மக்கள் நம்மைப் போலவே சாதாரணமாக வாழ்கின்றனர். இந்தியாவில் இருந்து சென்ற எங்களுடன் மிகுந்த நட்புடன் பழகினர். பாகிஸ்தானுக்கு செல்வது நரகம் செல்வதற்கு ஒப்பானது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போல அந்நாடு இல்லை. நல்ல நாடாகவே இருக்கிறது என தெரிவித்திருந்தார்.
நடிகை ரம்யாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித் துள்ள கர்நாடக பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷத், ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தேசவிரோத வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு மிரர் பத்திரிக்கைக்கு மீண்டும் பேட்டியளித்துள்ளார் ரம்யா.
சிலர் உங்கள் கருத்து குறித்து தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனரே, அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள ரம்யா, தேச துரோக வழக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது. நான் ஒன்றும் தேசத்திற்கு எதிராகவோ அல்லது தனி நபருக்கு எதிராகவோ கருத்தை தெரிவிக்கவில்லை. எனது கருத்தை திரிக்க முயல்கின்றனர் என்று கூறியுள்ளார்.
உங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டால் மீண்டும் பாகிஸ்தானுக்கு செல்வீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள ரம்யா,
ஏன் செல்லக்கூடாது? பாகிஸ்தானும், பாகிஸ்தானியர்களும் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் பல ஆயிரம் மைல்களை நான் நடந்தே கடந்து பாகிஸ்தான் செல்ல விரும்புகிறேன். இரு நாடுகளும் அமைதியை விரும்புகின்றன. அதனால் பாகிஸ்தான் செல்ல நான் ஏன் தயங்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.