இந்திரா, ராஜீவ் சொன்னதையே திரும்ப சொல்லி லோக்சபாவில் காங்கிரசுக்கு மோடி பதிலடி
டெல்லி: இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் கூறிய வார்த்தைகளையே திரும்ப சொல்லி, காங்கிரஸ் அவர்கள் வழியில் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் பேசினார்.
மோடி பேச்சில் தொனித்த கேலி, கிண்டல்களால் கையை பிசைந்த ராகுல் காந்தி, திடீரென அவையில் இருந்து வெளியேறிவிட்டார். கார்கே தனது முகத்தில் கர்சீப்பை போட்டுக்கொண்டார். லோக்சபாவில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களிலும் விவாதப்பொருளாகியுள்ளன.
கடந்த மாதம் 23ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், மரபுப்படி குடியரசு தலைவர் உரையாற்றினார். பின்னர் ரயி்ல்வே பட்ஜெட்டும் அதைத்தொடர்ந்து, 2016-17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.
குடியரசு தலைவர் உரையில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து பல கட்சி எம்.பிக்களும் இரு அவைகளிலும் உரையாற்றினர். உறுப்பினர்கள் பேச்சுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று பேசியதாவது:
பல்வேறு சட்ட மசோதாக்கள் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டபோதிலும், ராஜ்யசபாவில் முடக்கப்படுகின்றன. முக்கிய சட்டங்கள் நிறைவேற, எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தை முடக்க கூடாது என்று நான் சொல்லவில்லை.. ராஜீவ் காந்தியே முன்பு கூறிய வார்த்தைதான் அது. நாடாளுமன்றத்தில் முதல்முறையாக நுழையும் ஒரு எம்.பி. என்ற முறையில் எனது ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்துகிறேன்.
மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம். அன்று நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்கள் மட்டுமே பேச வேண்டும், முதல்முறையாக எம்.பிக்களாக பதவிக்கு வந்தவர்களுக்காக, முழுக்க 1 வாரம் ஒதுக்கி பேசச் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த வளர்ச்சி பற்றி மட்டுமே பேசவேண்டும். இம்மூன்றும் சபாநாயகரிடம் நான் விரும்பி கேட்டுக்கொள்ள கூடியவை.
நமது நாட்டை நாமே பலவீனமாக காட்டக்கூடாது என இந்திரா காந்தி 1974ம் ஆண்டே கூறினார். ஆனால், மேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்த முயல்வது, எதிர்மறை விமர்சனங்களை முன்வைப்பது
ஆச்சரியமளிக்கிறது. திட்டத்தில் குறை இருந்தால் நிவர்த்தி செய்ய உதவுங்கள்.
கடந்த 60 வருடங்களில் காங்கிரஸ் கட்சி வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது வறுமை நாட்டில் இருந்திருக்காது. இதை யாராலும் மறுக்க முடியாது. 60 வருடங்களாக நீங்கள் கழிவறைகளை கூட கட்டித்தரவில்லை என்பதால்தான், இப்போது அதை ஒரு பணியாக எங்கள் அரசாங்கம் செய்து தருகிறது.
கார்கே பேசும்போது, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறினார். நான் அதை ஒப்புக்கொள்கிறேன் (பாஜக உறுப்பினர்கள் பக்கம் சிரிப்பலை). 2012ம் ஆண்டு, கணக்கு தணிக்கையாளர் அறிக்கையை (காங்கிரஸ் ஆட்சி காலத்தில்) வேண்டுமானால் பாருங்களேன்.. ஊழல் நடந்திருப்பது உண்மை என்று தெரியும்.
கடந்த 14 வருடங்களாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வாழ்வது எப்படி என்பதை நான் கற்றுக்கொண்டுள்ளேன். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி நாட்டின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தலாம். நான் ஒரு நபரே அனைத்து பணிகளையும் செய்ய முடியாது. எதிர்க்கட்சிகள் அனுபவம் உள்ளவர்கள். நீங்களும் எனக்கு தோள் கொடுங்கள். இவ்வாறு மோடி பேசினார்.
மோடி தனது பேச்சின் பெரும் பகுதியில், கேலியோடு சேர்ந்து பதில் வழங்கியதால், ஆளும் கட்சி தரப்பில் இருந்து சிரிப்பலைகள் எழுந்து கொண்டிருந்தன. சோனியா, கார்கே, ராகுல் காந்தி போன்றோர் அவ்வப்போது ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும், தலையை தொங்க போட்டபடியும் இருந்தனர்.
மோடி பேசிக்கொண்டிருந்தபோது, கார்கே சில நிமிடங்கள் தனது முகத்தில் கர்ச்சீப்பை போட்டுக்கொண்டார். ராகுல் காந்தி அவையிலிருந்து திடீரென வெளியே போய்விட்டார். பல நிமிடங்கள் கழித்தே உள்ளே வந்தார்.