பிரசார் பாரதி ஊழியர்களுக்கு 2 மாதமாக சம்பளம் இல்லை.. ஒருவழியாக நிதி ஒதுக்கியது மத்திய அரசு
பிரசார் பாரதி ஊதிய விவகாரத்தில் ஊழியர்களுக்கு 208 கோடி ரூபாயை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
டெல்லி : பிரசார் பாரதி நிறுவன ஊழியர்களுக்கு இரு மாதங்களாக சம்பளம் வழங்காத விவகாரம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, 208 கோடி ரூபாயை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இருப்பில் இருந்து ஒதுக்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக தகவல் ஒளிபரப்புத் துறைக்கும், தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக விளங்கும் மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்திற்கும் இடையே நிர்வாக மோதல் நடந்து வருகிறது.
பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியில் 5 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வலியுத்தியது. ஆனால் எங்களை வழிநடத்த அமைச்சத்துக்கு உரிமை இல்லை என்று பிரசார் பாரதி கூறியது.
தூர்தர்ஷன் டிவி சேனல்கள், அகில இந்திய வானொலி நிலையம் ஆகியவற்றை இந்த அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பு நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, தகவல் ஒளிபரப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

பிரசார் பாரதியில் பிரச்னை
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரசார் பாரதியின் தலைவர் சூர்ய பிரகாஷ், கடந்த இரு மாதங்களாக பிரசார் பாரதி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து இருந்தார். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறைக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

பிரசார் பாரதியில் தலையீடு
மேலும், தனது பேட்டியில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிரசார் பாரதியின் சட்டங்களில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும், இது பல சட்டங்கள் மாற்றப்பட்டு இருப்பதாகவும், இந்த மோதல் போக்கால் மத்திய அரசு இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்றும் சூர்யபிரகாஷ் புகார் தெரிவித்து இருந்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தை
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, தேவையில்லாமல் அரசு விஷயங்களை தேசவிரோதிகளிடம் சிலர் கசிய விட்டதாகக் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், சம்பளப் பிரச்னை குறித்து அவர் நேரடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே சுமூக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

சுமூக தீர்ப்பு
இந்நிலையில், பிரசார் பாரதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சசி சேகர் வேம்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சம்பளப் பிரச்னையில் சுமூக தீர்வுகாணப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக தகவல் ஒளிபரப்புத் துறை தனது இருப்பில் இருந்து 208 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே நிலவி வந்துள்ள மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications