காவிரி விவகாரம்.. பிரதமர் மோடியுடன் சித்தராமையா இன்று 'தனிப்பட்ட' சந்திப்பு!
பெங்களூர்: தமிழகத்திற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நதிநீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. இதுகுறித்து ஆலோசிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் சித்தராமையா கூறியதாவது: காவிரி விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளேன். ஆலோசனைக்கு நான் மட்டுமே டெல்லி செல்ல உள்ளேன். பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் விவாதிக்க உள்ளேன். தமிழக முதல்வரையும் அழைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய அப்போது கோரிக்கை விடுப்பேன் என்றார் சித்தராமையா.
காவிரி தொடர்பாக இதுவரை 8 முறை கடிதம் எழுதியும், மோடி எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை என்று கேபினட் கூட்டத்தில் சித்தராமையா அதிருப்தி வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் மோடியை சித்தராமையா சந்திக்க உள்ளார்.