சுனந்தா புஷ்கர் லூபஸ் நோயால் அவதிப்பட்டார்: தோழி ஜரீன் கான் பேட்டி
டெல்லி: மெஹர், தரூர் உறவு விஷயத்தை மறந்துவிடுமாறு நான் சுனந்தா புஷ்கரிடம் எவ்வளவோ கூறினேனே என்று அவரது தோழி ஜரீன் கான் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த சுனந்தாவின் தோழி ஜரீன் கான் கூறுகையில்,
நாங்கள் முதல் முறையாக சுனந்தா மற்றும் தரூரை டெல்லியில் நடந்த விழா ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். அப்போது அவர் தரூர்க்கும், தனக்கும் இடையிலான நட்பு பற்றி தெரிவித்தார். அனைத்து பார்ட்டிகளிலும் சுனந்தா இருந்தால் தான் களைகட்டும். அவர் அழகிய இதயம் கொண்ட அழகிய பெண். கடந்த வெள்ளிக்கிழமை காலை நான் அவருக்கு பிளாக்பெர்ரியில் மெசேஜ் அனுப்பினேன். ஆனால் அவர் பதில் அனுப்பவில்லை. இதையடுத்து தரூருக்கு மெசேஜ் அனுப்பினேன். அவர் வேலையில் இருப்பதாக கூறினார். அவர்களுக்குள் பிரச்சனை இல்லை. தரூர் சுனந்தா மீது பைத்தியமாக இருந்தார். அனைத்து திருமணங்களிலும் சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் அவர்கள் சந்தோஷமாகத் தான் இருந்தார்கள்.
சுனந்தாவின் உடல்நிலை தான் பிரச்சனையாக இருந்தது. நான் சுனந்தாவை கடைசியாக துபாயில் சந்தித்தபோது லூபஸ் நோயால் அவதிப்பட்ட அவர் மெலிந்து காணப்பட்டார். அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார்.
நான் சுனந்தாவிடம் மெஹர், தரூர் உறவு பற்றி மறந்துவிடுமாறு எவ்வளவோ கூறினேன். நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. சசிக்கும், சுனந்தாவின் மகனுக்கும் அவரது இழப்பை தாங்க கடவுள் சக்தி அளிக்கட்டும் என்றார்.