வரி ஏய்ப்பு பிரச்சனையில் சிக்கிய டெல்லி அமெரிக்க தூதரக பள்ளி!
டெல்லி: டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பள்ளி வரி ஏய்ப்பு செய்தது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவையின் நிதி நிலைமை மற்றும் வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித்துறையின் வரிவிலக்கு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகப் பள்ளி வரி ஏய்ப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பல ஆசிரியர்கள் சட்டவிரோதமாக பணியாற்றியதாகவும், வரி ஏய்ப்பு மற்றும் விசா மோசடி செய்துள்ளதாகவும் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிகாரிகளின் பதிலுக்காக வெளியுறவுத் துறை காத்துக் கொண்டிருக்கின்றது. அந்த பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள், அவர்களின் ஊதியம் மற்றும் வங்கி விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
1973ம் ஆண்டில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பள்ளியில் பணிபுரிந்த 16 ஆசிரியர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பள்ளியில் மேலும் பல ஆசிரியர்கள் பணியாற்றியுள்ளனர் என்றும், அவர்களை கணக்கில் காட்டவில்லை என்றும் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அந்த பள்ளியை அமெரிக்க தூதரகம் நடத்தவில்லை என்றும், அங்கு படிக்கும் மாணவர்களில் வெகுசிலரே அமெரிக்கர்கள் என்றும் அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் ஜென் ப்ஸாகி தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே விசா மோசடி செய்ததாக அவரை நியூயார்க் போலீசார் கைது செய்து நிர்வாணப்படுத்தி சோதனையிட்டனர். இதையடுத்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications