'எவ்வளவோ முயற்சி செய்தும் பவானி உயிர் பறிபோய் விட்டதே': ஆஸ்பத்திரியில் சேர்த்த ஆட்டோ டிரைவர் கண்ணீர்
பெங்களூர்: எம்ஜி ரோட்டிலுள்ள சர்ச் தெருவில் நேற்றிரவு சுமார் 8.45 மணிக்கு தீவிரவாதிகளால் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த பெண்மணி பவானி தேவி, அவரது உறவினர் கார்த்திக் ஆகியோர் காயமடைந்தனர். அதிலும் பவானிதேவி படுகாயத்துக்கு உள்ளாகியிருந்தார்.
ஆட்டோவில் பவானிதேவி
அப்போது சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு ஓடிய அப்பகுதி பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த பவானி தேவியை தூக்கிக் கொண்டு, ஓடி வந்தனர். அவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்றை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அந்த ஆட்டோவை நரசிம்மா என்பவர் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அவசர உதவிக்காக சிலர் வழிமறித்ததும், நரசிம்மா தனது ஆட்டோவை நிறுத்தினார்.
மருத்துவமனை நோக்கி பறந்த ஆட்டோ
இதையடுத்து பவானி தேவியை பின் சீட்டில் படுக்க வைத்துள்ளனர். அவரின் அருகே மூவரும், டிரைவர் சீட்டின் இருபுறமும் நான்கு பேருமாக அமர்ந்துள்ளனர். இதையடுத்து 2 கி.மீ தொலைவிலுள்ள மல்யா மருத்துவமனை நோக்கி நரசிம்மா ஆட்டோவை ஓட்டத்தொடங்கியுள்ளார். தொழிலதிபர் விஜய் மல்யாவிற்கு சொந்தமான இந்த மருத்துவமனையில் அனைத்து வகை வசதிகளும் இருப்பதால் அங்கு செல்ல நரசிம்மா திட்டமிட்டு ஆட்டோவை ஓட்டியுள்ளார்.
டிராபிக் நெரிசலால் சிக்கல்
ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்றபோதிலும், எம்ஜிரோடு பகுதி ஷாப்பிங் செய்வோரால் பரபரப்பாக இருக்கும் என்பதால், ஆட்டோவை வேகமாக ஓட்ட முடியவில்லை. இதுகுறிறித்து நரசிம்மா கூறியதாவது: நான் முடிந்த அளவுக்கு வேகமாக ஆட்டோவை இயக்கினேன். நான் எவ்வளவுதான் ஹார்ன் அடித்தாலும், முன்னால் நின்ற வாகனங்கள் அசைந்து கொடுக்கவில்லை. யாரோ ஒரு அடாவடி ஆட்டோ டிரைவர் ஹார்ன் அடித்து தொல்லை தருகிறார் என்றுதான் பெரும்பாலானோர் நினைத்து இடம் தர மறுத்துவிட்டனர். ஆம்புலன்ஸ் மட்டும் இருந்திருந்தால் அதன் சைரன் சத்தத்தை கேட்டாவது வழி விட்டிருப்பார்கள். ஆனால் ஆட்டோ என்பதால் அது முடியாமல் போனது.
சிக்னல் ஜம்ப்
இருப்பினும், என்னுடன் ஆட்டோவில் வந்தவர்கள் டிராபிக் நெரிசல் பகுதிகளில் ரோட்டில் இறங்கி, வாகனங்களை ஒதுங்கி போகுமாறு சத்தம் போட்டபடி வந்தனர். இதனால் ஓரளவுக்கு ஆட்டோவை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல முடிந்தது. இடையில் எதிர்ப்பட்ட மூன்று சிக்னல்களிலும் நான் வண்டியை நிறுத்தவேயில்லை. ரெட் சிக்னலை மீறித்தான் வாகனத்தை ஓட்டிச் சென்றேன்.
ஆட்டோவில் ரத்த வெள்ளம்
மல்யா மருத்துவமனையில் அடிபட்ட பெண்மணியை சேர்த்துவிட்டு பின் சீட்டை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில், சீட் முழுக்கவுமே ரத்தம் தண்ணீர் போல தேங்கியிருந்தது. இதைப்பார்த்ததும், அந்த பெண்மணியின் நிலை எப்படி இருக்குமோ என்ற பதற்றத்தில் ஆஸ்பத்திரியிலேயே காத்திருந்தேன். ஆனால் பவானிதேவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் சொன்னபோது நிலை குலைந்துவிட்டேன். இருந்தாலும், என்னால் முடிந்த அளவுக்கு நான் உதவி செய்த திருப்தி மட்டும் எனக்கு எஞ்சியுள்ளது. இவ்வாறு நரசிம்மா கண்ணீர் மல்க கூறினார்.
சாலையெங்கும் ரத்த சிதறல்
குண்டில் இருந்து வெளியான இரும்பு துகள்கள், போல்டுகள், பவானி தேவியின் தலையில் தாக்கி அவரது மண்டை ஓட்டை உடைத்துள்ளது. எனவேதான் தலையில் இருந்து ரத்தம் ஆறாக வெளியே ஓடியுள்ளது. ஆட்டோ மட்டுமின்றி, ஆட்டோ பயணித்த சாலையெங்கும் ரத்தம் வழிந்தோடிய கறைகள் காணப்படுகின்றன. இது பார்ப்போரை பதைபதைக்க செய்வதாக இருந்தது.