மோடியை கயிற்றில் கட்டி ஜெயிலுக்குள் தள்ளியிருப்பேன்: மம்தா ஆவேச பேச்சு
கொல்கத்தா: மத்தியில் நான் ஆட்சியில் இருந்திருந்தால் மோடியின் இடுப்பில் கயிற்றை கட்டி சிறைக்கு இழுத்துச் செல்ல கூறியிருப்பேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
ஏற்கனவே மோடியை 'கழுதை' என்றும், 'மிஸ்டர்.வன்முறை' என்றும் கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில்;
மோடியை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பாதுகாத்து வருகிறது. நான் மட்டும் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால், மோடியின் இடுப்பில் கயிற்றை கட்டி சிறைக்கு இழுத்துச் செல்ல உத்தரவிட்டிருப்பேன்.
மோடியின் பிரிவினைவாத அரசியல் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடியது. எக்காரணத்தைக் கொண்டும் மத்தியில் பாஜகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு தரமாட்டோம் என்றார்.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை மேற்கு வங்க அரசு பாதுகாக்கிறது என்று மோடி தனது பிரச்சாரத்தின்போது குற்றம்சாட்டியிருந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் திருப்பியனுப்பப்படுவார்கள் என்றும் எச்சரித்தார். இதன்பிறகு மம்தாவின் கோபம் மோடியின் மீது திரும்பியுள்ளது. அதுவரை மோடியை தாக்கி பேசாமல் இருந்த, மம்தா பானர்ஜி மிகவும் மோசமாக விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார். சாரதா சிட்பண்ட் நிதி மோசடி குற்றவாளிகளுக்கும், மம்தாவுக்கும் தொடர்புள்ளது என்று மோடி கூறியதும் அவரது கோபத்தை தூண்டியுள்ளது.