22 ஆண்டில் 46 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்காவுக்கு பதவி உயர்வு !
டெல்லி: 22 ஆண்டில் 46 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்ட நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா, ஹரியானா மாநில முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும் டி.எல்.எப். நிறுவனத்துக்கும் இடையே ரூ.58 கோடி மதிப்பிலான நில விற்பனை ஒப்பந்தம் கடந்த அக்டோபர், 2012-ல் மேற்கொள்ளப்பட்டது. அதில், முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஹரியானா மாநில நில ஆவணப் பிரிவின் இயக்குநராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்கா கடந்த 2013 அக்டோபர் மாதம் ரத்து செய்தார். இதையடுத்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஹரியான அரசு குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு, இதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்று கூறி ஒப்பந்தத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு கெம்காவுக்கு ஹரியான அரசு, ஏழு பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை அனுப்பியது அதில், ஒப்பந்தத்தை ரத்து செய்து ராபர்ட் வதேராவின் பெயருக்கும், டி.எல்.எப். நிர்வாகத்துக்கும் களங்கம் ஏற்படுத்தியது, அரசின் கொள்கைகள் குறித்து ஊடகங்களில் குறை கூறியது, பணிமாற்றம் அளித்தும் உடனடியாக புதிய பணிக்கு செல்லாதது ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த நவம்பரில், பாஜக தலைமையிலான ஹரியானா மாநில அரசு பதவியேற்ற பின்னர், கெம்கா மீது தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்தது. இந்நிலையில் கெம்காவுக்கு ஹரியானா மாநில முதன்மை செயலராக பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
50 வயதான அசோக் கெம்கா மிகவும் நேர்மையான ஐ.ஏஎஸ் அதிகாரியாக அறியப்படுவர் ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் வரை தனது 22 ஆண்டுகால பணியில் 46 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications