மோடி பிரதமர் ஆனால், குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல்?
காந்திநகர்: தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆனால் அவருக்குப் பதிலாக குஜராத் மாநில முதல்வராக மூத்த அமைச்சர் ஆனந்திபென் பட்டேல் அந்த பதவியை வகிப்பார் என்று கூறப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. இந்நிலையில் மோடி பிரதமராகி டெல்லிக்கு சென்றுவிட்டால் அவருக்கு பதில் யாரை குஜராத் முதல்வராக நியமிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து மோடி காந்திநகரில் பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை கூட்டினார். இந்த கூட்டத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்தும், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மூத்த அமைச்சரும், நிர்வாகத்தில் அதிக அனுபவம் உள்ளவருமான ஆனந்திபென் பட்டேலை குஜராத் முதல்வர் ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனந்திபென் பட்டேல் கல்வி, வருவாய், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு ஆகிய முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார்.
ஆனந்திபென் பதவியேற்றால் அவர் தான் குஜராத்தின் முதல் பெண் முதல்வராவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதல்வர் போட்டியில் நிதின்பாய் பட்டேல், சவுரப் பட்டேல், ஆர்.சி. ஃபால்டு, சுரேந்திர பட்டேல், புருஷோத்தம் ருபாலா, வஜுபாய் வாலா மற்றும் பிகுபாய் தல்சானியா ஆகியோரும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications