35 பீஸ்.. குஜராத் தேர்தலில் எதிரொலித்த ஷ்ரத்தா கொலை.. மோடி மட்டும் இல்லைனா.. வாய்விட்ட பாஜக தலை
காந்திநகர்: டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தா, அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த விவகாரம் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி 3வது முறையாக ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் நகரங்கள் தோறும் அப்தாப் பிறப்பார் என குஜராத் தேர்தல் பிரசாரத்தில் அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசினார்.
தற்போது இந்தியாவை உலுக்கி உள்ள சம்பவம் ஷ்ரத்தா கொலை வழக்காகும். மும்பையை சேர்ந்த 26 வயது நிரம்பிய ஷ்ரத்தா, அப்தாப் பூனாவாலா என்பவருடன் டெல்லியில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே நடந்த பிரச்சனையில் அப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்பதன பெட்டியில் வைத்ததும், பல்வேறு இடங்களில் வீசியதும் தெரியவந்தது. இதில் அப்தாப்பை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் தேர்தலில் எதிரொலிப்பு
இந்நிலையில் தான் ஷ்ரத்தாவை கொடூரமாக அப்தாப் கொலை செய்த விவகாரம் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் இடம்பிடித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 1ல் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ல் 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8ல் வெளியாக உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் போட்டியிட்டுள்ளன.
அசாம் முதலமைச்சர் பிரசாரம்
தற்போது மூன்று கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். பாஜகவை வெற்றி பெற பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பிரசாரத்தில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் ஈடுபட்டுள்ளார்.
ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேச்சு
குஜராத்தில் அசாம் மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ள நிலையில் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இவர் தான் குஜராத் தேர்தலில் ஷர்த்தாவின் கொலை விவகாரத்தை பற்றி பேசி பிரசாரம் செய்துள்ளார். கட்ச் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:
35 துண்டுகளால் வெட்டி கொலை
டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாட்டையே உலுக்கி உள்ளது. மும்பையில் இருந்த சகோதரி ஷ்ரத்தாவை வரவழைத்த அப்தாப் 35 துண்டுகளாக உடலை வெட்டி கொலை செய்துள்ளார். உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். கொலையை மறைக்கும் நோக்கில் செயல்பட்ட அவர் இன்னொரு பெண்ணுடன் டேட்டிங் செய்துள்ளார்.
வலிமையான தலைவர் வேண்டும்
ஷ்ரத்தாவின் கொலை லவ் ஜிகாத் என்ற பெயரில் இது நடந்துள்ளது. நாம் நமது சமூகத்தை பாதுகாக்க வேண்டும். நாட்டில் வலுவான தலைவர் இல்லாவிட்டால் ஒவ்வொரு நகரத்திலும் அப்தாப் பிறப்பார். இதனால் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக்க வேண்டுவது மிகவும் முக்கியம். இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். குஜராத்திலும் பாஜகவுக்கு ஓட்டளிக்க வேண்டும்'' என ஹிமாந்தா பிஸ்வாஸ் கூறியுள்ளார்.
ஷ்ரத்தா விஷயத்தில் நடந்தது என்ன?
ஷ்ரத்தா-அப்தாப் இருவரும் மும்பையில் கால் சென்டரில் பணியாற்றினர். அதன்பிறகு மே மாதம் டெல்லிக்கு சென்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் திருமணத்துக்கு ஷ்ரத்தாவின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் அவர் ஷ்ரத்தாவுடன் பேசுவதை தவிர்த்தார்.
வெளியாகும் திடுக் தகவல்
இந்நிலையில் ஷ்ரத்தா-அப்தாப் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அப்தாப், ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். கொலையை மறைக்க உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து அவ்வப்போது ஆங்காங்கே உடல் பாகங்களை வீசிய நிலையில் தற்போது அவர் போலீசில் சிக்கி உள்ளார். கைதான அப்தாப்பிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தான் இந்த பிரச்சனை குஜராத் சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்துள்ளது.