பண்டிகை காலத்தில் டெல்லியை தாக்க இந்தியன் முஜாஹிதீன் திட்டம்: போலீசார் 'திடுக்' தகவல்
டெல்லி: பண்டிகை காலத்தில் டெல்லியில் தாக்குதல் நடத்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அய்ஜாஸ் ஷேக் என்பவர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சஹரன்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அய்ஜாஸ் முன்பதிவு செய்யாமல் ரயில்களில் பயணம் செய்து சஹரன்பூரை அடைந்துள்ளார். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர்களான பாகிஸ்தானில் இருக்கும் ரியாஸ் பட்கல் மற்ரும் மொஹ்சின் சவுத்ரி ஆகியோர் அய்ஜாஸை லக்னோ, மொராதாபாத் மற்றும் சஹரன்பூர் வழியாக டெல்லியை அடையுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
அவர்கள் அய்ஜாஸை டெல்லிக்கு செல்லுமாறு கூறியதே பண்டிகை காலத்தில் அங்கு தீவிரவாத தாக்குதல் நடத்த தான் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தான் அய்ஜாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அய்ஜாஸ் டெல்லியில் உள்ள ஸ்லீப்பர் செல் ஆட்களை சந்தித்து தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்திருக்கிறார். போலி ஐ.டி. கார்டுகள் தயாரிப்பது, அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஹவாலா மூலம் பணம் அனுப்புவது தான் அய்ஜாஸின் வேலை. முன்னதாக ஜும்மா மஸ்ஜித் மற்றும் வாரணாசியில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தபோது அதற்கு பொறுப்பேற்று மீடியாக்களுக்கு இமெயில் அனுப்பியது இந்த அய்ஜாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.