மும்பை.. ஆட்டோவில் ஏறி ரயிலில் பயணித்த கெஜ்ரிவால்.. போட்டோ எடுக்க அலைமோதிய மக்கள்
மும்பை: ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி மாநில முன்னாள் முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் மும்பையில் ஆட்டோ மற்றும் எலக்ட்ரிக் ரயிலில் பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலத்தை அடுத்து, தற்போது மகாராஷ்ட்ராவில் அர்விந்த் கெஜ்ரிவால் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். மூன்றாம் நாள் பிரசாரத்திற்காக, விமானம் மூலம் மும்பை சென்ற அவர், விமான நிலையத்தில் இருந்து அந்தேரி பகுதிக்கு ஆட்டோ ஒன்றில் பயணம் செய்தார்.
அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோவில் செல்லும் காட்சியை பலர் தங்களது செல்போனில் படம் பிடிக்க முயற்சித்ததால் சாலையில் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தை ஒதுக்கிக் கொண்டு சென்ற ஆட்டோ ரயில் நிலையத்தை சென்றடைந்ததும், சர்ச் பார்க் நிலையத்துக்கு பயணச்சீட்டு வாங்கிய கெஜ்ரிவால், மின்சார ரயிலின் பொது வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்.
அந்தேரி ரயில் நிலையத்திலும் ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் குவிந்து விட்டதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
டெல்லியின் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு நிராகரிக்கப்பட்டதால், 22 பூனைப்படை வீரர்களைக் கொண்டு அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கெஜ்ரிவால் தற்போது வசித்து வரும் தில்லி திலக் லேன் குடியிருப்பில் 22 போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கெஜ்ரிவாலை எப்போதும் பின் தொடர்ந்து சென்று பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். ஆனால் காருக்குள் மெய்க் காப்பாளர்கள் போல் அமர்ந்து செல்ல கெஜ்ரிவால் அனுமதிக்கவில்லை. 4 அல்லது 5 பேர் வாகனத்திலும் 4 பேர் அவரைச் சுற்றிலும் நின்று பாதுகாப்பு அளிப்பார்கள். 8 பேர் ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கெஜ்ரிவால் செல்லும் பாதையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக உள்ளூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உஷார் படுத்தப்படுவதாக போலீசார் கூறினர்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் பாதுகாப்பினை மீறி ஆட்டோ, ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். கெஜ்ரிவாலின் இந்த அதிரடி சுற்றுப்பயணம் எளிமையா? அல்லது, ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் விளம்பர ஸ்டண்ட்டா? என்பதை அறிந்துக் கொள்ள முடியாமல் மும்பைவாசிகள் திணறித்தான் போனார்கள்.












Click it and Unblock the Notifications