தலித் வாலிபருடன் காதல்: மகளை கழுத்தை நெறித்துக் கொன்று புதைத்த இஸ்லாமியர்
முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் தலித் வாலிபரை காதலித்ததால் 19 வயது முஸ்லீம் பெண் அவரது தந்தையால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹஸன். அவரது மகள் ருக்சார்(19). ருக்சார் தனது கிராமத்தைச் சேர்ந்த தலித் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு ஹஸன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் ருக்சார் தனது காதலை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு ஹஸன் தனது மகளை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். இது குறித்து பாதுகாவலர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் புதைக்கப்பட்ட ருக்சாரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஆலோக் பிரியதர்ஷி கூறுகையில்,
ஹஸன் என்பவர் தனது மகளை கொலை செய்துவிட்டதாக எங்களுக்கு புகார் வந்தது. விசாரணையில் ஹஸன் மற்றும் ஒருவர் சேர்ந்து ருக்சாரை கழுத்தை நெறித்து கொன்றது தெரிய வந்தது. ஹஸன் தனது மகளை கொலை செய்ததை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் மகளின் உடலை வீட்டுக்கு அருகே உள்ள சுடுகாட்டில் புதைத்ததை மட்டும் அவர் ஒப்புக் கொண்டார்.
நான் என் மகளை கொலை செய்யவில்லை. 3 முதல் 4 கிராமத்தினர் தான் அவரை கொலை செய்தார்கள். ருக்சார் தலித் வாலிபரை காதலித்தது கிராமத்தினருக்கு தெரியும் என்று ஹஸன் கூறினார் என்றார்.