"வேட்டைக்காரர்கள் ஜாக்கிரதை.." பாயும் காங். மூத்த தலைவர்! பரபரக்கும் உத்தரகண்ட் களம்! ஆட்சி யாருக்கு
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், நாங்கள் வென்று ஆட்சியைப் பிடிப்போம் என்று காங். கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 65% வாக்குகள் பதிவாகி இருந்தது.
அங்கு மொத்தம் 70 இடங்கள் உள்ள நிலையில், ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

உத்தரகண்ட்
தற்போது வரை வெளியான முடிவுகளில் உத்தரகண்ட் மாநிலத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உத்தரகண்ட் மாநிலத்தில் தொங்கு சட்டசபையே அமையும் எனக் கணித்திருந்தன. அதேபோல இப்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது இருப்பினும், உத்தரகண்ட் மாநிலத்தில் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் ராவத் நம்பிக்கை
இது தொடர்பாக ஹரிஷ் ராவத் மேலும் கூறுகையில், "நாங்கள் நல்ல மெஜாரிட்டி பெறுவோம். பாஜகவின் ஆணவத்திற்கு இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் பதிலடி கொடுப்பார்கள். உத்தரகண்ட் மக்களுக்கும் பாஜகவின் ஆணவத்திற்கும் இடையேயான தேர்தல் இது. உத்தரகண்ட் மாநிலத்தின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இது. உத்தரகண்ட் மக்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இங்கு காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

வேட்டைக்காரர்கள் ஜாக்கிரதை
அதேநேரம் உத்தரகண்ட் மாநிலத்தில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தொங்கு சட்டசபையே அமையும் எனக் கணித்துள்ளன. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் என்றாலும் கூட, பாஜக தவறான வழிகளில் முயல்வதாக ஹரிஷ் ராவத் குற்றஞ்சாட்டி உள்ளார். காங்கிரஸ் சார்பில் வெல்பவர்களை பாஜக கைப்பற்ற முயல்வதாகச் சாடிய ஹரிஷ் ராவத், வேட்டைக்காரர்கள் உள்ளதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நடவடிக்கை
தேர்தலுக்குப் பின்னர் விரைவாக முடிவுகளை எடுக்க ஏதுவாகக் காங்கிரஸ் தலைவர்கள் டேராடூனைச் சென்று அடைந்துள்ளனர். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ராஜ்யசபா எம்பி தீபேந்தர் ஹூடா இதைக் கண்காணிக்க உள்ளனர். அதேபோல உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பிரசாரக் குழு பொறுப்பாளருமான ஹரிஷ் ராவத் டேராடூனில் இருக்கிறார். அவர், காங்கிரஸ் பார்வையாளர் குழுவுடன் இணைந்து, நிலைமையைக் கண்காணித்து, தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளார். தேவைப்பட்டால் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாடும் வகையில் காங்கிரஸ் தனது சட்டக் குழுவையும் தயார் நிலையில் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications