இந்தியா கூட்டணி 315 இடங்களில் வெல்லும்.. பாஜக 195-ஐ தாண்டாதாம்.. அடித்துச் சொல்லும் மம்தா!
கொல்கத்தா: நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி குறைந்தபட்சம் 315 இடங்களையும், பாஜக அதிகபட்சமாக 195 இடங்களையும் கைப்பற்றும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கணித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று 96 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் இன்று 8 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கான் மக்களவைத் தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்று, தமது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய மம்தா பானர்ஜி, "இதுவரை வாக்குப்பதிவு நன்றாக நடந்துள்ளது. அதனால்தான் மத்தியில் ஆளும் பாஜக தலைவர்கள் பதற்றத்தில் உள்ளனர். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரப் போவதில்லை என்பதை அவர்களே உணர்ந்துள்ளனர்.
பாஜகவினர் இனி 400 தொகுதிகளில் வெல்வோம் என தற்பெருமை பேசக்கூடாது. அவர்கள் அதிகபட்சம் 190 - 195 இடங்களை மட்டுமே வெல்வார்கள். இந்தியா கூட்டணி 315 இடங்களை வெல்லும்." எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய மம்தா பானர்ஜி, மட்டுவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது பிரதமருக்கு அவ்வளவு அன்பு இருந்தால் சிஏஏ படிவத்தை நிரப்பச் சொல்லாமல் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். சிஏஏ அமலாக்கத்தை எப்படியும் நிறுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாஜக அதை செய்ய விரும்பினால், அது நான் உயிரோடு இருக்கும் வரை நடக்காது.
சந்தேஷ்காலியில் அமைதியின்மையை ஏற்படுத்தி மேற்கு வங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளது. சந்தேஷ்காலி பெண்களை பாஜக அவமதிக்கிறது.
பராக்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அறிவித்த 5 உத்தரவாதங்கள் அடிப்படையே அற்றவை. ஏனெனில் அவை ஒருபோதும் நிறைவேற்றப்படாது." என மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications