ஜவுளித்துறையுடன் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய தொடர்பு..ஜவுளி பூங்கா பற்றி பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி:
பிரதமரின் மெகா ஜவுளிப் பூங்கா, உலக அளவிலான செயற்கை இழை மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப சந்தையில் தமிழ்நாடு அதிக பங்கைப் பெற உதவும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஜவுளிக்கான சர்வதேச மையமாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஊக்குவிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் ஜவுளித் துறையை மேம்படுத்தும். தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேச மாநிலங்களில் PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கடந்த வாரம் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.4,445 கோடி செலவிடப்படும். அதன் கீழ் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு (பிஎம் மித்ரா) பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 7 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இது தனியார் - மத்திய அரசு கூட்டமைப்பில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

பி.எம்.மித்ரா ஜவுளி மண்டலம்
இந்த நிலையில் இந்தியாவில் முதலாவதாக பி.எம். மித்ரா-பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா விருதுநகர் மாவட்டத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்த இந்திய நாட்டின் பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு முதன்மையான மாநிலம்
தொழில் துறையைப் பொறுத்தவரையில், இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலான கவனத்தைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது. அந்தத் தொழில் துறையில் ஜவுளி வர்த்தகமும் முக்கியமானதாகும். நம் நாட்டின் கைத்தறித் துணி வர்த்தகத்தில், தமிழ்நாடு மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. பெருமளவு பருத்தி நூல் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், தமிழ்நாடு 'இந்திய நாட்டின் நூல் களஞ்சியம்' என அழைக்கப்படுவதோடு, நூற்பு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, ஆயத்த ஆடை மற்றும் ஆடைத் தயாரிப்பில் முதன்மையான மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

விருதுநகரில் முதல் ஜவுளி தொழில்நுட்ப பூங்கா
விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் நிறுவனத்தின் மூலம் அமையப்பெறவுள்ள, பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவாக பி.எம். மித்ரா பூங்கா திகழப் போகிறது. பிரதமரையும் என்னையும் அழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பேசுகிற போது ஒரு வேண்டுகோளை எடுத்து வைத்தார். நிச்சயமாக, உறுதியாக அழைப்போம், வருவீர்கள், அந்த நிகழ்ச்சியை சிறப்பிப்பீர்கள். மத்திய அரசு இந்தப் பூங்காவிற்கு அனுமதி அளித்துள்ள ரூ.500 கோடி மானியத்துடன், மொத்தம் ரூ.2 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்தப் பூங்கா முழு அளவில் செயல்படும் போது, சுமார் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவதோடு, தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறினார்.

பியூஷ்கோயல் பாராட்டு
தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் பணியாற்றுகிறார். ஜவுளிப் பூங்கா திட்ட தொடக்க விழாவில் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் ஜவுளி பூங்கா திட்டத்தை விரைந்து செயல்படுத்த திறமையாக செயலாற்றும் முதல்வருக்கு பியூஷ்கோயல் நன்றி தெரிவித்துள்ளார்

பிரதமர் மோடி ட்வீட்
தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் பிரதமரின் மெகா ஜவுளிப் பூங்கா, உலக அளவிலான செயற்கை இழை மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப சந்தையில் தமிழ்நாடு அதிக பங்கைப் பெற உதவும். இதன் மூலம் ஜவுளிக்கான சர்வதேச மையமாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஊக்குவிக்கும்.












Click it and Unblock the Notifications