இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றார் மனாபி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட திருநங்கை மனாபி பந்தோபாத்யாய் தனது பணியை துவக்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் திருநங்கை கல்லூரி முதல்வர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் மனாபி. இவர் கடந்த மாதம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக தேர்வானார். அதனைத் தொடர்ந்து நேற்று மனாபி கல்லூரி கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பது மேற்கு வங்கத்தில் தான். புதிய முதல்வராக பதவியேற்ற மனாபிக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் இனிப்புகளை வழங்கி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மனாபி கூறுகையில், ‘கல்லூரி சர்வீஸ் கமிஷன் நடத்திய நேர்காணலில் தேர்ச்சி பெற்று நான் எனது திறமையினால் இந்த நிலையை எட்டியுள்ளேன். இந்த நியமனம் நான் ஆணா, பெண்ணா, அல்லது 3-ம் பாலினமா என்பது பற்றியது அல்ல.
சமூகத்தை விட மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து எனக்கு இப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது' என்றார்.
துணைவேந்தர் ரத்தன்லால் ஹாங்லூ, மனாபியை வரவேற்று கூறும்போது, "அவர் இனத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் இவரது நியமனம் பெரிய உத்வேகத்தை அளிக்கும், சட்டத்துக்கு முன் பாலின வேறுபாடின்றி அனைவரும் சமம் என்பதை இவரது நியமனம் நிறுவியுள்ளது" எனத் தெரிவித்தார்.
நைஹதியில் மரபான வங்காள நடுத்தர குடும்பத்தில் பிறந்த மனோபி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் ஆவார். இவருக்கு திபாஷிஷ் என்ற வளர்ப்பு மகன் ஒருவரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications