காற்றுல பறக்குற மாதிரி இருக்கும்.. இந்தியாவின் நீளமான கண்ணாடி நடைபாலம் திறப்பு.. எங்கே தெரியுமா?
விசாகப்பட்டினம்: நாட்டின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் ஆந்திர தலைநகரில் திறக்கப்பட்டுள்ளது. எந்த பிடிமானமும் இன்றி அந்தரத்தில் நிற்பது போன்ற ஒரு உணர்வை கொடுக்கும் வகையில் இந்த நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் புயல் வீசினாலும் தாங்கும் அளவுக்கு வல்லமையுடன் இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பாலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கீழே பார்க்கும் போது, கண்ணைக்கவரும் இயற்கை காட்சிகளும், மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வுக்ளை கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த கண்ணாடி பாலத்திற்கு சென்று பார்வையிட எவ்வளவு கட்டணம் என்ற விவரங்களும் வெளியாகி உள்ளது.

நாட்டின் உயரமான கண்ணாடி பாலம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக உயரமான கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி உயரத்தில் இந்த கண்ணாடி பாலம் (ஸ்கைவாக்) அமைந்துள்ளது. விசாகப்பட்டினம் எம்பி ஸ்ரீபாரத் நேற்று திறந்து வைத்த இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.
கைலாசகிரி மலையுச்சியில் அமைந்துள்ள இந்த கண்ணாடி பாலம் ரூ. 7 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 'கிழக்குக் கடற்கரையின் ஆபரணம்' எனப் புகழப்படும் துறைமுக நகரில் உள்ள கைலாசகிரி மலை உச்சியில் கட்டப்பட்டுள்ள பாலம் சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கும் 50 மீட்டர் நீளமுள்ள இந்தியாவின் மிக நீளமான கான்டிலீவர் கண்ணாடி பாலம், அடிப்பகுதியில் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் நிற்பது போன்ற ஒரு உணர்வை கொடுக்கும்.
காற்றில் மிதப்பது போல
அதாவது இந்த கண்ணாடி பாலத்தில் நாம் நின்று பார்க்கும் போது அந்தரத்தில், காற்றில் மிதக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. தரையிலிருந்து 862 அடி (கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 அடி) உயரத்தில் உள்ளது. பாலத்தின் மேலிருந்து கீழே பார்த்தால் அங்கேயுள்ள பள்ளத்தாக்குகளும் அதன் கண்ணைக் கவரும் இயற்கை காட்சிகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வுகளை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
சுற்றிலும் பசுமை காட்சிகள்
360 டிகிரி கோணத்தில் சுற்றிலும் பசுமை நிறைந்த பகுதியாக இந்த கண்ணாடி பாலம் உள்ளது. 40 மிமீ தடிமன் கொண்ட உயர்தர 3 அடுக்கு கண்ணாடி, 40 டன் வலுவூட்டப்பட்ட எஃகு இதில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் புயல் வீசினாலும் தாங்கி நிற்கும் வல்லமையுடன் இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, 20 - 40 பேர் கொண்ட சிறிய குழுக்களுக்கு 10 - 15 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
கட்டணம் எவ்வளவு?
இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.300 வசூலிக்கப்படும். ஒருபுறம் வங்காள விரிகுடாவின் பரந்த நீர்ப்பரப்பு அடிவானம் வரை விரிய, மறுபுறம் நகர வானலைகளுடன் பசுமையான கிழக்குத் தொடர்ச்சி மலைகள் இணைகின்றன. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் "பொன் நேரக்" காட்சிகள் கண்ணாடியில் பிரதிபலித்து, புகைப்படக் கலைஞர்களுக்கும் சாகச விரும்பிகளுக்கும் மாயாஜால அனுபவத்தை கண்முன்னே கொண்டு வந்து தரும் வகையில் இந்த கண்ணாடி பாலம் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications