மறைந்திருந்து தாக்கிய தீவிரவாதிகள்..! ராணுவ அதிகாரி, மனைவி, மகனுடன் பலி! மேலும் 4பேர் வீரமரணம்!
குவாஹாட்டி: மணிப்பூர்- மியான்மர் எல்லையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் இந்திய ராணுவ அதிகாரி, அவரது மனைவி, 8 வயது மகன் மற்றும் 4 வீரர்கள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
மணிப்பூரில் அண்மைக்காலமாக ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சீனா, மியான்மர், வங்கதேசம் மற்றும் பூட்டான் ஆகிய எல்லைகளில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் அஸ்ஸாம் ரைபிள்ஸின் கமாண்டிங் அதிகாரி கலோனல் விப்லாப் திரிபாதி தனது மனைவி, 8 வயது மகன் ஆகியோருடன் வெளியே சென்றுவிட்டு ராணுவ வாகனத்தில் முகாமுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வாகனத்தில் இவர்களுடன் இந்திய வீரர்களும் இருந்தனர்.
இந்த நிலையில் வாகனம் மணிப்பூர்- மியான்மர் எல்லையில் சூராசந்த்பூர் மாவட்டம் அருகே வந்த போது இன்று காலை 10 மணிக்கு அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வாகனத்தில் இருந்த விப்லாப் திரிபாதி, அவரது மனைவி, மகன், மேலும் 4 வீரர்கள் என 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். இந்த தாக்குதலில் மேலும் 4 வீரர்கள் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் பெஹியாங் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்த தாக்குதலை மணிப்பூரை சேர்ந்த தீவிரவாத இயக்கமான மக்கள் விடுதலை அமைப்பு நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. ராணுவத்தில் அல்லாதோர் தீவிரவாத தாக்குதலில் இறந்தது இந்த மாவட்டத்தில் இதுவே முதல்முறையாகும்.
சம்பவம் நடந்த இடம் சரியாக மணிப்பூர் தலைநகர் இம்பாலாவிலிருந்து 100 கி.மீ. வடக்கே உள்ளது. தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதலும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராணுவ அதிகாரி அவரது குடும்பத்தினருடன் இறந்ததை மணிப்பூர் முதல்வர் என் பைரான் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த தீவிரவாதிகளை பிடிக்க மாநில படையும் துணை ராணுவ படையும் தயார் நிலையில் உள்ளதாகவும் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவர் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
மணிப்பூரில் நடந்த தீவிரவாத தாக்குதலிலேயே இந்த தாக்குதல்தான் மிகவும் மோசமானது என சொல்லப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய பிறகு மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் மணிப்பூரில் சூரசந்த்பூரில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையின் கான்வாய் வாகனம் மீது தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல் சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. மேலும் இது கண்டனத்துக்குரியது. இந்திய ராணுவம் 5 வீரமிக்க வீரர்களை இழந்துவிட்டது. மேலும் ராணுவ அதிகாரியின் மனைவி, மகனும் இறந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications