இந்திராகாந்தி கொலையாளி மகன் சரப்ஜித் சிங் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்
அமிர்தசரஸ்: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளிகளில் ஒருவரான பீந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்துள்ளார்.
16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு அவருடைய வீட்டில் அவருடைய பாதுகாவலர்களான பியாந்த் சிங் (வயது 33) மற்றும் சத்வந்த்சிங் (26) என்பவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திராகாந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள் மீது மற்ற பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குலில் பீந்த் சிங் சம்பவ இடத்திலேயே பலியானான். சத்வந்த் சிங்குக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்திரா கொலையாளிகளில் ஒருவரான பீந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா. சிரோன்மணி அகாலிதளம் (அமிர்தசரஸ்) கட்சியில் சேர்ந்தார். இவர், கடந்த 2007 நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிண்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்தநிலையில் சரப்ஜித் சிங் கல்சா, நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் பிரகாஷ் சிங் ஜண்டாலி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 16வது லோக்சபா தேர்தலில் அக்கட்சி சார்பாக அவருக்கு பதேகர் சாகிப் தனித்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.