வாரணாசியில் மோடி- கேஜ்ரிவால் இடையே கடும் போட்டி- குவியும் வெளிநாட்டு ஊடகங்கள்!!
வாரணாசி: வாரணாசி லோக்சபா தொகுதியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் இடையேதான் கடும் போட்டி இருப்பதால் வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் அங்கு குவிந்துள்ளனர்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியிலும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார்.

12-ந் தேதி தேர்தல்
இங்கு பாஜக, ஆம் ஆத்மியைத் தவிர காங்கிரஸ் கட்சி அஜய் ராய் என்ற உள்ளூர் எம்.எல்.ஏவை நிறுத்தியுள்ளது. இத்தொகுதியில் வரும் 12-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

மோடி- கேஜ்ரிவால் இடையே போட்டி
ஆனால் இதுவரையிலான கள நிலவரப்படி மோடி மற்றும் கேஜ்ரிவால் இடையேதான் கடும் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

சித்தார்த் வரதராஜன் கருத்து
இந்த தொகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜனும் கூட தமது ட்விட்டர் பக்கத்தில், மோடி- கேஜ்ரிவால் இடையேதான் போட்டி இருக்கிறது. காங்கிரஸ் எட்டாத தொலைவில் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

வெளிநாட்டு பத்திரிகையாளர்கள்
வாரணாசி தொகுதி நிலவரத்தை அறிவதற்காக வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் பலரும் கூட வாரணாசியில் முகாமிட்டுள்ளனர். ஏ.ஏ.பி., நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய தலைவர் கிறிஸ் ஓட்டன் கூறுகையில், வாரணாசி தொகுதியில், மோடிக்கும் கெஜ்ரிவாலுக்கும் ஏற்பட்டுள்ள போட்டி தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காகவே வெளிநாட்டு செய்தியாளர்கள், இங்கு குவிந்துள்ளனர் என்றார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மோடி
டைம் பத்திரிகையின் செய்தியாளர் நிலஞ்சனா பவுமிக் கூறுகையில், நரேந்திர மோடி மீது, இந்திய மக்களிடம் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களிடமும், அரசுகளிடமும், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அது பற்றிய தகவல்களை சேகரிக்க இங்கு வந்துள்ளோம் என்றார்.

உடனுக்குடன்..
இதனாலேயே வாரணாசி தொகுதியில் நிகழும் ஒரு சிறு சம்பவமும் கூட உடனே ஊடகங்களில் முதன்மை செய்தியாகிவிடுகிறது.. இன்னும் 3 நாட்கள்தான்.. எத்தனை பரபரப்புகளை தாங்கப் போகிறதோ வாரணாசி!












Click it and Unblock the Notifications