அடுத்த அதிரடி.. பாஜக எம்.பி. அறக்கட்டளை வழங்கிய விருதை ஏற்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா!
பாஜக எம்பியின் நிதியுதவியில் இயங்கும் அறக்கட்டளையின் விருதை ஏற்க ஐபிஎஸ் அதிகாரி ரூபா மறுப்பு தெரிவித்துவிட்டார்.
Recommended Video
பெங்களூர்: பாஜக எம்பியின் நிதியுதவிகளில் இயங்கும் அறக்கட்டளையின் "நம்ம பெங்களூர்" விருதை ஏற்க ஐபிஎஸ் அதிகாரி ரூபா மறுத்துவிட்டார்.
கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹார சிறையின் டிஐஜியாக இருந்தவர் ரூபா. இவர் கடந்த ஆண்டு சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் குறித்தும் இதற்காக உயரதிகாரி சத்யநாராயணா அவரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதும் குறித்தும் ரூபா ஆதாரத்துடன் வெளியே கொண்டு வந்தார்.
துறை ரீதியான நடவடிக்கைக்கும் அவர் தயார் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர் சிறைத்துறையிலிருந்து வேறு ஒரு துறைக்கு மாற்றப்பட்டார்.
நம்ம பெங்களூர் அறக்கட்டளை
இந்நிலையில் நம்ம பெங்களூர் விருதுகளையும் அதற்கான ரொக்க பரிசையும் ஏற்க மறுத்து விட்டார். நம்ம பெங்களூர் அறக்கட்டளையானது கடந்த 8 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருதையும் ரொக்க பரிசையும் வழங்கி வருகிறது.
8 பேர் பரிந்துரை
இந்த அறக்கட்டளைக்கு பாஜக மாநிலங்களவை உறுப்பினரான ராஜீவ் சந்திரசேகர் நிதியுதவி அளித்து வருகிறார். இந்த ஆண்டு சிறந்த அரசு அதிகாரிக்கான விருதுக்கு 8 அரசு அதிகாரிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் ரூபாவும் ஒருவர். பெங்களூருவில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படுவர்.
அரசியல் அமைப்பு
பாஜக எம்பியின் நிதியுதவியில் இயங்கும் அறக்கட்டளை என்பதை அறிந்த ரூபா விருது பெற மறுப்பு தெரிவித்து அந்த அறக்கட்டளையின் தலைவருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், அனைத்து அரசு அதிகாரிகளும் அரசியல் அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகளின் கீழ் இயங்கும் அமைப்புகளிலிருந்து சற்று தள்ளியே நிற்க வேண்டும் என்பதைத்தான் எதிர்பார்ப்பர்.
மனசாட்சி ஏற்கவில்லை
அப்போதுதான் அந்த அதிகாரி பொதுமக்களின் கண்களுக்கு நேர்மையானவராக தெரிவர். எனவே இந்த விருதை பெற எனது மனசாட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.