ஸ்மிருதி சர்ச்சை: டிரையல் ரூமுக்கு வெளியில்தான் கேமரா இருந்ததாக வக்கீல் தகவல்!
கோவா: கோவா துணிக்கடையில் உடைமாற்றும் அறைக்கு வெளியேதான் கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அந்தத் துணிக்கடையின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, நேற்று கோவா வந்தபோது ஒரு துணிக்கடைக்குச் சென்றார். அப்போது உடைமாற்றும் அறைக்குச் சென்ற அவர், அங்கு ஒரு துளையில் தொங்கவிடப்பட்டிருந்த ரகசிய கேமராவைக் கண்டறிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தனது கணவர் ஜுபின் இரானியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, இரானி அளித்த தகவலின்பேரில் அங்கு விரைந்த அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மைக்கேல் லோபோவும், போலீஸாரும் அங்கு கேமரா இருந்ததை உறுதி செய்தனர். கடையில் மேலாளர் அறையில் இருந்த கணினியுடன் அந்த கேமரா இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கேமராவில் உள்ள பதிவுகள் அனைத்தையும் ஆராய்ந்தபோது அதில் பல பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து இரானியுடன், மற்றொரு பெண்ணும் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து அந்தக் கடைக்கு போலீஸார் சீல் வைத்து, கடை ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனிடையே துணிக்கடையில் உடைமாற்றும் அறைக்கு வெளியேதான் கேமரா பொறுத்தப்பட்டிருந்ததாக அந்த துணிக்கடையின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications