சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் முகாம் மீது மாவோயிஸ்டுகள் பயங்கர தாக்குதல்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முகாமிட்ட இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் முகாம் மீது நேற்று மாவோயிஸ்டுகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். ஆனால் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் பதிலடி கொடுத்து மாவோயிஸ்டுகளின் தாக்குதல் முயற்சியை முறியடித்தனர்
சத்தீஸ்கரின் ரானாபால் அருகே கொண்டகான் கிராமத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசாரின் 41-வது பட்டாலியன் முகாம் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக இங்கு அவர்கள் முகாமிட்டுள்ளனர்.
அப்பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த போலீசார் அங்கு முகாமிட்ட நிலையில் அப்பகுதியில் முறையான சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள மாவோயிஸ்டுகள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 12.40 மணியளவில் 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் அம்முகாமை சுற்றி வளைத்து உக்கிரமான தாக்குதலை நடத்தினர். ராக்கெட் லாஞ்சர்கள் மூலமும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். வெவ்வேறு திசைகளில் இருந்து இந்த தாக்குதலை மாவோயிஸ்டுகள் மேற்கொண்டனர்.
இதற்கு இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் சரியான பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே 3 மணிநேரம் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதன் பின்னர் தாக்குப் பிடிக்க முடியாத மாவோயிஸ்டுகள் காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடினர்.
இம்மோதலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மாவோயிஸ்டுகள் விட்டுச் சென்ற 4 ராக்கெட் லாஞ்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்தும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.