பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: எல்லையில் பதற்றம் அதிகரிப்பு
ஸ்ரீநகர் : சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்டத் தேர்தல்கள் அமைதியாக நடைபெற்றுள்ள நிலையில், 3ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு என்னும் இடத்தில் நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பீரங்கி குண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிர் சேதம் ஏதுமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 5ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின், மோக்ரா என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் பலியாகினர். ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை சீர் குலைக்கவே இந்த தாக்குலை பாகிஸ்தான் உதவியுடன் பயங்கரவாதிகள் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications