2014ல் வெளியான தீர்ப்புக்கு மாறாக உள்ளது.. ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அறிவிக்கை ரத்து செய்யப்பட்டது. இது உச்சநீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை வழக்கின் எதிர்தரப்பாளர்களான பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதேபோல தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு எதிராக கியூப்பா என்ற விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியவை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு ஆதரவாக மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதேபோல தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்தனர்.
இந்த அனைத்து மனுக்கள் மீதும் ஜனவரி 31ம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதையடுத்து இன்று மாலை வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்தனர். 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மீறுவதை போல தமிழக அரசின் சட்டம் இருப்பதாக அவர்கள் கூறினர். 2014ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.
மேலும், ஜல்லிக்கட்டுக்காக ஒரு சட்டத்தை கொண்டுவர என்ன அவசியம் ஏற்பட்டது, இதற்கான சட்ட காரணங்களை நீங்கள் கூற முடியுமா என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதேபோல, ஜல்லிக்கட்டு சட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்வியை விலங்குகள் நல வாரியத்திடம் நீதிமன்றம் எழுப்பியது.
அதேநேரம், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் இன்னும் இரு நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டுவரப்பட்ட வழிமுறைகள் குறித்து அரசு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications