சிறப்பு அந்தஸ்து வரலாறு ஆகிவிட்டது.. மீண்டும் வராது.. பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டு அமித்ஷா பரபர
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அமித்ஷா, சிறப்பு அந்தஸ்து என்பது இனி வரலாறாகத்தான் இருக்கும் என்றும் இனி ஒருபோதும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது எனவும் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலமும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு காஷ்மீரில் நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இதனால், அங்கு பாஜக, காங்கிரஸ் கூட்டணி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க பாஜகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது.
பாஜகவும் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்று ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், ஜம்மு மற்றும் ராஜோரியை புதிய சுற்றுலாதலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அமித்ஷா, "பயங்கரவாதம் நிறைந்திருந்த காஷ்மீரை சுற்றுலா தலமாக மாற்றியிருக்கிறோம். ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370 என்பது வரலாறாக மாறிவிட்டது. அது ஒருபோதும் திருப்பி கொடுக்கப்படாது. சட்டப்பிரிவு 370 இளைஞர்கள் கையில் துப்பாக்கிகளையும் கற்களையும் மட்டுமே கொடுத்தது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை, ஜம்மு கஷ்மீரில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றை உருவாக்குவதாக உள்ளது" என்றார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சியின் தேர்தல் அறிக்கையில், சட்டப்பிரிவு 370 திரும்ப அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரில் 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இந்த தேர்தல் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications