ஜம்மு காஷ்மீர் தேர்தல்: கட்சியையே கலைத்துவிட்டு காங்கிரஸுக்கு மீண்டும் தாவுகிறாரா குலாம் நபி ஆசாத்?
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை அதன் தலைவர் குலாம் நபி ஆசாத் கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடும் என வெளியான தகவல் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சல்மான் நிஜாமி, காங்கிரஸுடன் ஆசாத் கட்சி இணைவதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, பொய்யானது என மறுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 2014-ல்தான் கடைசியாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தது. 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அப்போதுதான் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதனடிப்படையில் 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைக்குமா? தனித்துப் போட்டியிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சித்தாலும் தேசிய மாநாட்டுக் கட்சியில் கடும் எதிர்ப்பு உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரஸில் இணைகிறார் என தகவல்கள் வெளியாகின. இதனால் ஜம்மு காஷ்மீர் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி செய்தி தொடர்பாளர் சல்மான் நிஜாமி, இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாங்கள் காங்கிரஸுடன் இணைவதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது, பொய்யானது எனவும் சல்மான் நிஜாமி விளக்கம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications