தாஜ்மஹாலின் படிக்கட்டுகளில் உருண்டு விழுந்து ஜப்பான் பயணி பரிதாப பலி!
ஆக்ரா: ஆக்ராவின் புகழ்பெற்ற தாஜ்மஹாலின் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்து ஜப்பான் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களை பார்க்கும் நோக்கத்தில் ஜப்பானில் இருந்து டெல்லி வந்த ஹுவேடா என்பவர் நேற்று ஆக்ரா நகரை வந்தடைந்தார்.
இங்குள்ள பதேபுர் சிக்ரி, ஆக்ரா கோட்டை ஆகியவற்றை தனது நண்பருடன் பார்வையிட்ட பின்னர் பிற்பகலில் தாஜ்மஹால் அமைந்துள்ள பூங்காவை வந்தடைந்தார்.

கால் இடறி விழுந்த ஹுவேடா:
வரலாற்று சிறப்பு மிக்க காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலின் எழிலை ரசித்து வியந்தபடி படிக்கட்டுகளில் இறங்கி வந்துகொண்டிருந்தபோது ஹுவேடாவும், அவரது நண்பரும் கால் இடறி படிக்கட்டின்மீது விழுந்தனர்.

தலையில் பலத்த காயம்:
ஒருவர்பின் ஒருவராக படிக்கட்டுகளில் இருவரும் உருண்டபடி வந்ததில் ஹுவேடாவின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரது நண்பருக்கு கால் எலும்பு முறிந்தது.

இறந்துபோன பயணி:
சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தாஜ் கஞ்ச் காவல் நிலைய போலீசார், காயமடைந்த இருவரையும் உடனடியாக அருகாமையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஹுவேடாவின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்த டாக்டர்கள் அவரது நண்பருக்கு மட்டும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விசாரணையில் போலீசார்:
இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள ஜப்பான் நாட்டு தலைமை தூதரகத்துக்கு தகவல் தெரிவித்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications