425 கோடி ரூபாய்க்கு "குட்டி" பங்களாவை விலைக்கு வாங்கிய குமாரமங்கலம் பிர்லா
மும்பை: பிரபல தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, ரூ. 425 கோடிக்கு ஒரு பழைய பாரம்பரிய பெருமை கொண்ட பங்களாவை விலைக்கு வாங்கியுள்ளார்.
அந்த பங்களாவிந் பெயர் ஜாதியா ஹவுஸ். மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ளது. இந்த பங்களாவைத்தான் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளார் பிர்லா.
ஆதித்யா பிர்லா குரூப்பின் தலைவராக இருப்பவர்தான் குமாரமங்கலம் பிர்லா. 25,000 சதுர அடிக்கு கட்டடத்தைக் கொண்ட பிரமாண்ட பங்களா இது. ஏலத்தில் இதை இவ்வளவு பெரிய விலை கொடுத்து எடுத்துள்ளார் பிர்லா.

நாட்டிலேயே மிகப் பெரிய விலைக்கு ஏலம் போன கட்டடம் என்ற பெருமையையும் இந்த விற்பனை மூலம் இந்தக் கட்டடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு மும்பையின் மகேஸ்வரி பகுதியில் உள்ள வீடு ரூ. 400 கோடிக்கு விற்பனையானதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அதை தற்போது பிர்லா வாங்கியுள்ள இந்த ஜாதியா ஹவுஸ் முறியடித்துள்ளது.
இந்த வீட்டுக்கு அருகே உள்ள ஹோமி பாபா வசித்த மெஹராங்கிர் கட்டடம் ரூ. 372 கோடிக்கு 2014ம் ஆண்டு விலை போனது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டடத்தின் விலையில் 10 சதவீதத்தை தற்போது கட்டியுள்ள பிர்லா, வரும் நாட்களில் மீதத் தொகையை செலுத்துவார் என்று ஏலத்தை நடத்திய சர்வதேச நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசெல்லா தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டடத்தின் முன்னாள் உரிமையாளர் ஒய். ஜாதியா. இவர், 70களில் இக்கட்டடத்தை எம்.சி. வக்கீல் என்பவரிடமிருந்து வாங்கினார். தற்போது இந்தக் கட்டடத்தில் அருண் மற்றும் ஷியாம் ஜாதியா சகோதரர்கள் பொறுப்பில் வைத்துள்ளனர்.
பிர்லா இந்தக் கட்டடத்தை தனது தனிப்பட்ட உபயோகத்திற்காக வாங்கியுள்ளதாக தெரிகிறது. தற்போது அவர் அல்டாமெளன்ட் சாலையில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார். இந்தப் புதிய கட்டடத்திலிருந்து 10 நிமிட தொலைவில்தான் அவரது வீடு உள்ளது.












Click it and Unblock the Notifications