ஜெ. வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்ய கூடாது.. மூத்த காங்கிரஸ் தலைவர் பரபரப்பு பேட்டி!
பெங்களூர்: ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.வி.ராஜசேகரன் தெரிவித்தார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.வி.ராஜசேகரன் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.
இது தமிழக அரசு மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியசாமி ஆகியோர் சம்பந்தப்பட்டது. ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், ஏற்கனவே காவிரி பிரச்சினை காரணமாக இரு மாநில மக்களிடையே சுமூகமான உறவு இல்லை. எனவே தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான இந்த விவகாரத்தில் தலையிடுவதை கர்நாடக அரசு தவிர்க்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் ஜெயலலிதா மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார். எனவே அவரது விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அந்த மாநில தலைவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற எனது கருத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி, மாநில தலைவர் ஜி.பரமேஸ்வர், முதல்வர் சித்தராமையா ஆகியோரிடம் தெரிவிப்பேன். காங்கிரசை பொறுத்த வரை இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பது கட்சி மேலிடம்தான். எனவே இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தும்படி ஏற்கனவே சோனியாகாந்திக்கு 3 பக்க கடிதம் எழுதி உள்ளேன்.
என்னை பொறுத்தவரை அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியாவின் பரிந்துரை ஏற்கத்தக்கதல்ல. அரசு வக்கீல் என்ற முறையில் மேல் முறையீடு செய்ய பரிந்துரைக்க அவருக்கு உரிமை உள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் அமைச்சரவை தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு எம்.வி.ராஜசேகரன் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்ட பிரிவு தலைவர் தனஞ்சய், மாநில மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரும், கர்நாடகா அப்பீல் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளனர். ராஜசேகரனும் இவ்வாறு கூறியுள்ளார். இவை கர்நாடக அரசின் மனநிலையை பிரதிபலிக்கும் பேட்டிகளாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications