அமைச்சர்கள் கதறி அழுததை ஜெயலலிதா ரசிக்கவில்லை?
பெங்களூர்: ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றபோது பலர் கதறியும், குமுறியும், தேம்பியும், விசும்பியும் அழுததை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களது அழுகையால் கட்சிக்கும், தனக்கும், தமிழ்நாட்டுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டதாகவும், தமிழகத்தைப் பார்த்து மற்ற மாநிலத்தவர் கேலி பேசும் நிலை ஏற்பட்டு விட்டதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருதுகிறாராம். இதனால் அழுகாச்சி அமைச்சர்கள் மீது அவர் கடும் கோபத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூர் சிறையில் அடைபட்டிருக்கிறார் ஜெயலலிதா. அவரது ஜாமீன் மனு அக்டோபர் 7ம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமைதான் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், பதவி பறிபோனதால் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகியுள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் மீண்டும் பதவி கிடைத்துள்ளது. ஆனால் பதவி ஏற்பின்போது அனைத்து அமைச்சர்களும் அழுது புலம்பி, மூக்கைச் சிந்தி தமிழகத்தின் பெயரைக் கெடுத்து விட்டனர்.
கிண்டலோ கிண்டல்
இந்த அழைக் காட்சிகளை வைத்து பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கேலி செய்யாதவர்களே இல்லை. இதனால் ஜெயலலிதா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அவரும் சிறையில் இருந்தபடி பதவி ஏற்பு விழாவைப் பார்த்து டென்ஷனாகி விட்டாராம்.
கோபத்தில் ஜெயலலிதா
அமைச்சர்கள் அழுத காட்சி வீடியோக்களைப் பார்த்து கடும் கோபமும் அடைந்துள்ளாராம். இப்படியா நமது மாநிலத்தின் பெயரைக் கெடுப்பார்கள் என்று கோபத்துடன் இருக்கிறாராம்.
வெளியில் சோகம்.. உள்ளுக்குள் விருந்து
அதை விட முக்கியமாக இப்படி வெளியில் அழுதபடியும், சோகத்துடனும் காணப்படும் அமைச்சர்கள் பலர் நட்சத்திர ஹோட்டலில் தங்குவதும், பிரியாணி உள்ளிட்ட விருந்துகளை சாப்பிட்டு கலக்கிக் கொண்டிருப்பதும் கூட ஜெயலலிதா காதுகளுக்குப் போயுள்ளதாம்.
ரகசியக் கண்காணிப்பு
அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளையும் ரகசியமாக கண்காணித்து உரிய முறையில் சிறையில் உள்ள ஜெயலலிதாவின் காதுகளுக்கு தகவல்கள் போய்க் கொண்டுதான் உள்ளதாம்.
வெளியே வந்ததும் இருக்கிறது வேட்டு...
இதனால் ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்த பிறகு பலருக்கு அவர் வேட்டு வைப்பார் என்ற பரபரப்பு தற்போது சென்னையில் கூடியுள்ளது.