ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: 6 நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட லெக்ஸ் புராப்பர்டீஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களையும் வழக்கில் இணைத்துக்கொள்ளகோரி, கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இம்மனுவுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு ஆறு நிறுவனங்களுக்கும் உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்தது கர்நாடக ஹைகோர்ட். இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. திமுகவின் அன்பழகனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
கர்நாடகா மனு
இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் இம்மாதம் 5ம் தேதி புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், லெக்ஸ் புராப்பர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களையும், இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 6 நிறுவனங்களும் ஜெயலலிதாவுடையதுதான் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அன்பழகன் தரப்பும் இதே கோரிக்கையை முன்வைத்து மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கர்நாடக அரசும் இதே கோரிக்கையை முன்வைத்தது.
நோட்டீஸ்
ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் லெக்ஸ் புராப்பர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், ஜெயலலிதாவுடையது என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், கர்நாடக கோரிக்கையை ஏற்றுள்ள உச்சநீதிமன்றம், 6 நிறுவனங்களும், இதுகுறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேர்த்தே விசாரணை
நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலையை எதிர்க்கும் மனுவோடு சேர்த்து, இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.