ஜெயலலிதா பூரண நலம்.. திருப்பதியில் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பு பூஜை
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் அடைந்துள்ளதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் திருப்பதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
திருப்பதி: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் நலம் பூரண குணம் அடைந்துள்ளதால் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் திருப்பதிக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார்.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்டுகள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல் பூரணமாக குணம் அடைந்து விட்டதாக அப்போலோ நிர்வாகம் அறிவித்துள்ளது. என்றாலும் அவருக்கு ஓய்வு தேவை என்பதால் மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு உடல் பூரண குணம் அடைந்துவிட்டதால், தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருப்பதிக்கு சென்று ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். இதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம், அங்குள்ள பத்மாவதி ஓய்வு விடுதியில் தங்கி இருந்தார். பின்னர், இன்று அதிகாலை 5.30 மணிக்கு வி.ஐ.பி. தரிசன நேரத்தில் ஏழுமலையான் கோவிலுக்கு அவர் சென்று சிறப்பு பூஜை செய்தார்.
அங்கு, அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். பின்னர், ரங்க நாயகர் மண்டபத்தில் லட்டு பிரசாதம் அவருக்கு வழங்கப்பட்டது.