ஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் மனுவில் குளறுபடி- கர்நாடகா சட்டத்துறை இன்று அவசர ஆலோசனை!
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு மீது உச்சநீதிமன்றம் கோரியுள்ள விளக்கம் குறித்து ஆராய்வதற்காக கர்நாடகா சட்ட அமைச்சகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கடந்த மே 11-ந் தேதி விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என கர்நாடகா அரசு 'நீண்ட இழுபறி'க்குப் பின்னர் முடிவு செய்தது.

இதனடிப்படையில் கடந்த மாதம் 23-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. சுமார் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக இம்மனு இருந்தது.
இதில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பின் குளறுபடிகள் பிரதான அம்சமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனிடையே ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகனும் உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு அப்பீல் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
இந்நிலையில் கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் சில ஆவணங்கள் விடுபட்டுள்ளதாகவும் அது தொடர்பான விவரங்களை தருமாறும் திடீரென உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது. மிக முக்கியமான அப்பீல் மனுவில் எப்படி சில ஆவணங்கள் விடுபட்டன? என்ற பரபரப்பான கேள்வியும் எழுந்தது.
ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கின் கர்நாடகா அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவோ, பொதுவாக வழக்குகளில் இதுபோன்ற விளக்கங்கள் கோரப்படுவது வழக்கமான ஒன்றுதான் என சமாளித்திருக்கிறார். தற்போது உச்சநீதிமன்றம் கோரியுள்ள ஆவணங்களை கர்நாடகா தாக்கல் செய்த பின்னர் அடுத்த வாரம் விசாரணை நடைபெற உள்ளது.
இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக கர்நாடகா சட்ட அமைச்சகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அப்பீல் மனுவில் முக்கிய ஆவணங்கள் விடுபட்டது எப்படி? இதற்கு யார் காரணம்? என்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications