ஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கு- வாதத்தை முடிக்க கூடுதல் அவகாசம் கோரும் பிவி ஆச்சார்யா
டெல்லி: சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான இறுதி பதில் வாதங்களை நிறைவு செய்ய தமக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியொர் அடங்கிய பெஞ்ச் முன் நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடகா அரசு தரப்பு, ஜெயலலிதா உள்ளிட்டோர் தரப்பு தமது வாதங்களை முன்வைத்துவிட்டனர்.
இவற்றுக்கு இறுதியாக கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா பதிலளித்து வருகிறார். மீண்டும் நேற்று தொடங்கிய விசாரணையின் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கும் நோக்கத்தில் பல நிறுவனங்களை சசிகலா தொடங்கியதாக குறிப்பிட்டார். அப்போதே நீதிபதிகள் உங்கள் வாதத்தை விரைவாக முடித்து கொள்ள முடியுமா என ஆச்சார்யாவிடம் கேட்டனர். இன்றைய விசாரணையின் போது பிவி ஆச்சார்யா, தாம் பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரினார்.
உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை அடுத்த வாரம் தொடங்குகிறது. ஆகையால் கோடை காலத்திலும் விசாரணையை தொடருவதா? என்பதை நீதிபதிகள் முடிவு செய்ய உள்ளனர். அப்படி கோடை கால விடுமுறையிலும் விசாரணையை தொடர முடிவு செய்தால் இதே நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், சிறப்பு பெஞ்சாக மாற்றப்பட வேண்டும். இது தொடர்பாக நாளை முடிவெடுக்கப்பட உள்ளது.