ஜெயலலிதா தனது சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்காமல் மறைத்தது ஏன்?: சுப்ரீம்கோர்ட்டில் ஆச்சார்யா
டெல்லி: அரசு ஊழியர் நடத்தை விதிகள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்தார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின் போது கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தமது இறுதி வாதங்களை முன்வைத்தார். அப்போது அரசு ஊழியர் நடத்தை விதிமுறைகள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்குப் பொருந்தாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறியிருப்பது தவறானது.
அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகள் என்பது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு பொருந்தும். இதனடிப்படையில் ஜெயலலிதா ஒரு அரசு ஊழியர். தம்முடைய சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்க வேண்டியது அவரது கடமை. ஆனால் ஏன் ஜெயலலிதா தம்முடைய சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்காமல் மறைத்தார்?.
ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரி ஆவணங்களை வைத்து அவரை விடுவித்துள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்படும் வழக்குகளில், எப்படி வருமானம் வந்தது என்பதை விரிவாக விளக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் தெளிவாகவே கூறியுள்ளது.
ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அப்படி விவரிக்கப்படவில்லை. இதற்கு மாறாக வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்களை காட்டியிருக்கிறார்கள். வருமான வரித்துறை ஒருவருக்கு எப்படி வருமானம் வந்தது என்பதை பார்ப்பதில்லை. இதனால் வருமான வரி ஆவணங்களைக் காட்டிவிட்டு இப்படித்தான் வருமானம் வந்தது என்று சொல்லி தப்பிக்க முடியாது. வருமான வரி ஆவணங்களை சொத்துக்கான ஆதாரமாக கருதவே முடியாது என்றார் ஆச்சார்யா.












Click it and Unblock the Notifications